அத்தியாயம் 32
குண்டும் குழியுமாக இருந்தது அந்த சாலை. மிதமான வேகத்தில் செல்லும்போதே ஆட்டோ அப்படியும் இப்படியுமாய் குலுங்கியது. திவ்யாவோ ஆட்டோவுக்குள்ளே மனம் கலங்கிப்போனவளாய் அமர்ந்திருந்தாள். அவளுடைய பார்வை ஏதோ ஒரு சூனியத்தை வெறித்திருந்தது. அவளுடைய மூளையின் ஒவ்வொரு அணுவிலும், குறுக்கும் நெடுக்குமாய் பலவித குழப்ப எண்ணங்கள். அவள் எவ்வளவோ முயன்று மனதை தெளிவாக வைத்துக் கொள்ள நினைத்தும், அது மேலும் மேலும் குழம்பிய குட்டையாகவே மாறிக்கொண்டிருந்தது.
அசோக்கும், திவாகரும் அவளுடைய மனக்கண்ணில் மாறி மாறி தோன்றிக் கொண்டிருந்தார்கள். வசீகரமாக சிரித்தார்கள். ஆளுக்கொரு புறம் நின்று கையசைத்து அழைத்தார்கள். அவள் குழம்பிப்போய் பரிதாபமாக பார்க்க, இருவரும் கைகொட்டி சிரித்தார்கள். சிந்தித்து சிந்தித்து.. அந்த குழப்ப எண்ணங்களில் உழன்று உழன்று.. திவ்யாவுக்கு மூளை தீப்பிடித்துக் கொண்டது மாதிரி இருந்தது. கண்களை இறுக்கி மூடிக் கொண்டாள். தலையை இரண்டு புறமும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள். அமைதியாக ஆட்டோ சீட்டில் தலையை சாய்ந்துகொண்டாள்.
"நீ சொன்ன எடம் வந்துருச்சும்மா.. இங்கயா.. இன்னும் போகனுமா..?"
ஆட்டோக்காரரின் குரல் திவ்யாவை நனவுலகுக்கு இழுத்து வந்தது. ஒருகணம் அவள் எங்கே இருக்கிறோம் என்றே குழம்பிப் போனாள். தலையை அப்படியும் இப்படியுமாய் திருப்பி திருப்பி பார்த்தாள். வெளியே இப்போது நன்றாக இருட்டியிருந்தது. ஆட்டோ நின்ற இடம் ஓரளவுக்கு பிடிபட்டதும், ஆட்டோவுக்கு பின்புறமாக இருந்த கண்ணாடி வழியே வெளியே பார்த்தாள். கொஞ்ச தூரத்திலேயே ஒரு மரத்தின் அடியில் திவாகரின் கார் நிற்பது தெரிந்தது. உடனே அவசரமாய் ஆட்டோக்காரரிடம் சொன்னாள்.

"இங்கதாங்க.. நிறுத்துங்க.."
ஏறும்போதே பேசியபடி மீட்டருக்கு மேலே இருபது ரூபாய் எடுத்துக் கொடுத்துவிட்டு ஆட்டோவில் இருந்து இறங்கினாள். திரும்பி திவாகரின் காரை நோக்கி நடந்தாள். அவள் காரை நெருங்கியதுமே, காரின் ஒருபக்க கதவு திறந்து கொண்டது. உள்ளே ஏறி அமர்ந்தாள். அமர்ந்ததுமே ஏதோ ஒரு விரும்பத்தகாத நெடி அவளுடைய நாசியை குப்பென தாக்கியது. 'என்ன ஸ்மெல் இது..? இது.. இது.. சில சமயங்கள் அசோக்கிடம் இருந்து இந்த ஸ்மெல் வருமே..? தி..திவாகர் குடித்திருக்கிறாரா என்ன..?' அவள் யோசித்துக் கொண்டிருக்கும்போதே,
"எவ்வளவு நேரம் வெயிட் பண்றது..?" திவாகர் ஒருவித எரிச்சலான குரலில் கேட்டான்.
"ஸா..ஸாரி.." என்றாள் திவ்யா மென்மையாக.
"காலேஜ்ல இருந்து அப்போவே கெளம்பிட்டல..? அப்புறமும் ஏன் லேட்டு..?"
"வீ..வீட்டுக்கு கெஸ்ட் வந்துட்டாங்க.."
"ம்ம்.. எல்லாம் நம்மள மண்டை காய விடுறதுக்குனே எங்க இருந்தாவது வந்துருவானுக..!! சரி போலாமா..?"
"ம்ம்.. போலாம்..!!"
கார் கிளம்பியது. திவாகருக்கு இன்னும் கோபம் போகவில்லையோ என்று திவ்யாவுக்கு பட்டது. நேற்று நள்ளிரவு பிறந்தநாள் வாழ்த்து சொல்லாமல் விட்டதற்கு காலையில் அவனிடம் நன்றாக வாங்கிக் கட்டிக்கொண்டாள். 'உடம்பு சரியில்லை.. நல்ல தலைவலி..' என்று சமாளித்துப் பார்த்தும் அவன் சமாதானம் ஆகவில்லை. நன்றாக இவளை திட்டிவிட்டு காலை கட் செய்துவிட்டான்.
அப்புறம் திவ்யா திரும்ப கால் செய்தபோது, திவாகர் எடுக்கவில்லை. திவ்யாவுக்கு ஏனோ மறுபடியும் கால் செய்து அவனிடம் கெஞ்ச தோன்றவில்லை. அவளுடைய மனதில் வேறு சில குழப்பங்கள். அப்படியே விட்டுவிட்டாள். மதியத்துக்கு மேல் அவனே திரும்ப கால் செய்தான். 'ஈவினிங்காவது சீக்கிரம் வா..!!' என்றான் கோபம் குறைந்தவன் போல. இப்போது பார்த்தால் மீண்டும் கோபமாக இருக்கிறானோ என்பது மாதிரி இருந்தது அவனது முகம். ஆனால் அவள் அவ்வாறு நினைத்து கொண்டிருக்கும்போதே,
"ஏன் ஒரு மாதிரி டல்லா இருக்குற திவ்யா..?" திவாகர் மிகவும் கவலையாக கேட்டான்.
"அ..அப்டிலாம் ஒன்னும் இல்லையே..?"
"இல்ல.. உன் முகம் ஏதோ வாடிப் போன மாதிரி இருக்குது..!!"
"சேச்சே.. அப்டிலாம் எதுவும் இல்ல திவாகர்.. நான் நார்மலாத்தான் இருக்குறேன்..!!"
"ம்ம்ம்... இந்த ட்ரெஸ் உனக்கு நல்லா இருக்கு திவ்யா..!!"
"தே..தேங்க்ஸ்.."
சொல்லிவிட்டு திவ்யா மெலிதாக புன்னகைக்க, அவனும் இப்போது இறுக்கம் தளர்ந்து புன்னகைத்தான். 'இவன் எந்த நேரத்தில் எந்த மாதிரி பிஹேவ் செய்வான் என்றே புரிந்து கொள்ளவே முடியவில்லையே.. ஏன்..?' என திவ்யா இப்போது மனதுக்குள் நினைத்துக் கொண்டாள். தான் அணிந்திருந்த உடையை ஒருமுறை குனிந்து பார்த்துக் கொண்டாள். பார்த்ததுமே அசோக்கின் நினைவு அவளுடைய மனதுக்குள் பரபரவென பரவ ஆரம்பித்தது.
"ஐயே.. இது எனக்கு பிடிக்கவே இல்ல.."
"ப்ச்.. உன் ஆளுக்கு புடிக்கனுமா வேணாமா..?"
"பு..புடிக்கணும்.."

"அப்போ இதை எடுத்துக்கோ..!!"
அசோக்கின் நினைவு வந்ததும், சற்றுமுன் ஆட்டோவுக்குள் இருந்த அதே மனநிலைக்கே திவ்யா இப்போது மீண்டும் ஆட்பட்டாள். மீண்டும் குறுக்கும் நெடுக்குமாய் அதே குழப்ப எண்ணங்கள். மீண்டும் அதே தலைவலி..!! திவாகர் அமைதியாக காரை செலுத்திக் கொண்டிருக்க, திவ்யா கண்களை மூடி மனதை ஆசுவாசப்படுத்த முயற்சித்துக் கொண்டிருந்தாள்.
ஒரு பத்து நிமிடங்கள் இருக்கும். ஏதோ ஒரு குழப்பமான கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்த திவ்யா திடீரென விழிப்பு வந்தவளாய் தலையை உதறிக் கொண்டாள். கார் எங்கே சென்று கொண்டிருக்கிறது என்று சுற்றும் முற்றும் பார்த்தாள். சுற்றிலும் கும்மென்று இருள் மண்டிக்கிடந்தது. தெருவிளக்குகள் கூட இல்லாத சாலையில் கார் சீறிக் கொண்டிருந்தது.
"எங்க போயிட்டு இருக்கோம்..?" திவ்யா குழப்பமாக கேட்டாள்.
"என் வீட்டுக்கு..!!"
"வீட்டுக்கா..? வீட்லையா பார்ட்டி..??"
"எஸ்..!!"
"நே..நேத்து ஏதோ ரெஸ்டாரன்ட்ன்னு சொன்னீங்க..?"
"அது என் பிசினஸ் பிரண்ட்சுக்காக.. அது ஈவினிங்கே முடிஞ்சது..!! இது உனக்கு மட்டும்.. ஸ்பெஷலா..!!" திவாகர் சொல்லிவிட்டு இளித்தான்.
"ஓ..!! நான் ரெஸ்டாரன்ட்ன்னு நெனச்சேன்.."
"எங்க இருந்தா என்ன..? அதில்லாம.. நீ இதுவரை என் வீட்டுக்கு வந்ததே இல்லைல..?"
"ம்ஹூம்.."
"இன்னைக்கு வா.. வந்து பாரு.. நீ வாழப்போற வீட்டை..!! நேரா வீட்டுக்கு போறோம்.. ஃபோன் பண்ணி சாப்பாடு ஆர்டர் பண்றோம்.. மொட்டை மாடில கேண்டில் லைட் வெளிச்சத்துல உக்காந்து சாப்பிடுறோம்..!! வாவ்... நெனச்சுப் பாக்கவே ரொம்ப ரொமாண்டிக்கா இருக்குல..?" திவாகர் உற்சாகமாக கேட்க,
"ம்ம்ம்.." திவ்யா சுரத்தே இல்லாத குரலில் சொன்னாள்.
அதன்பிறகு ஒரு ஐந்து நிமிடங்களில் கார் அந்த வீட்டை அடைந்தது. சுற்றிலும் எந்த வீடும் இன்றி இருளுக்குள் தனியாக நின்றிருந்தது திவாகரின் வீடு. திவ்யா நினைத்ததை விட வீடு பெரிதாக பிரமாண்டமாகவே இருந்தது. திவாகர் காரை வீட்டுக்கு வெளியிலேயே நிறுத்தி பார்க் செய்தான். இறங்கிக் கொண்டார்கள். அந்த ஆறடி உயர க்ரில் கேட்டை திவாகர் திறந்து உள்ளே தள்ளிவிட்டான். இருவரும் வீட்டுக்குள் நுழைந்தார்கள்.
"வீட்ல யாரும் இல்லையா..?" ஹாலுக்குள் நுழைந்ததும் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே திவ்யா கேட்டாள்.
"நீ வர்றேன்னு வேலைக்காரங்களுக்குலாம் லீவ் கொடுத்து அனுப்பிச்சுட்டேன்..!!"
திவாகர் சொல்ல, திவ்யாவுக்கு ஏதோ மனதுக்குள் உறுத்தியது. 'ஏன்.. அவர்கள் இருந்தால் என்ன..?' என்று அவள் யோசித்துக் கொண்டிருக்கும்போதே, திவாகர் கேஷுவலான குரலில் கேட்டான்.
"சரி என்ன சாப்பிடுற..? காபி, டீ ஆர் ஜூஸ்..?" என்று கேட்டவன், திவ்யா பதில் சொல்வதற்கு முன்பே,
"ஜூஸ் சாப்பிடலாம்.. சரியா..?" என்று அவனே பதிலும் சொல்லிக்கொண்டான். மேலும்,

"நானே இன்னைக்கு என் கையால.. என் செல்ல திவ்யாக்குட்டிக்கு ஜூஸ் போட்டு எடுத்துட்டு வரேன்.. ஜஸ்ட் டூ மினிட்ஸ்.. இங்கயே வெயிட் பண்ணு..!!"
என்று கொஞ்சலாக சொல்லிவிட்டு உள்ளறைக்குள் சென்று மறைந்தான். திவ்யாவுக்கு எதுவுமே சொல்ல தோன்றவில்லை. திவாகரை எதிர்த்து எதுவும் பேச தோன்றவில்லை. அமைதியாக சென்று ஜன்னலுக்கு அருகே நின்று கொண்டவள், கர்ட்டைனை விலக்கி வெளியில் தெரிந்த இருளை வெறித்தாள்.
ஒரு ஐந்து நிமிடத்தில் திவாகர் மீண்டும் ஹாலுக்குள் பிரவேசித்தான். இப்போது அவனுடைய இரண்டு கைகளிலும் இரண்டு க்ளாஸ்கள் உதித்திருந்தன. சிரித்தவாறே நடந்து வந்து திவ்யாவின் தோளை தொட்டான். அவள் திரும்பி பார்த்ததும் ஒரு க்ளாஸை அவளிடம் நீட்டினான். திவ்யா குழப்பமான குரலில் கேட்டாள்.
"என்னது இது..?"
"ஸ்வீட் லைம்..!!"
"ஐயோ.. லைம் எனக்கு பிடிக்காதே.." திவ்யா முகத்தை சுளித்தவாறே சொல்ல,
"ஆனா.. எனக்கு பிடிக்குமே..?" திவாகர் பல்லை காட்டினான்.
"கமான் திவ்யா.. சாப்பிடு.. நல்லாருக்கும்.." என்று அவளை கட்டாயப்படுத்தினான்.
திவ்யாவும் சற்று தயங்கிவிட்டு, அப்புறம் மெல்ல அந்த ஜூஸை பருக ஆரம்பித்தாள். ஜூஸ் குடித்து முடித்ததும்,
"சாப்பாடு ஆர்டர் பண்ணிட்டேன் திவ்யா.. இன்னும் டென், ஃபிப்டீன் மினிட்ஸ்ல வந்துடும்..!! வா.. அதுவரை நான் உனக்கு வீட்டை சுத்தி காட்டுறேன்..!!"
காலி க்ளாசை டீப்பாயில் வைத்துவிட்டு, இருவரும் ஹாலில் இருந்து உள்ளறைக்குள் நுழைந்தார்கள். திவாகர் ஒவ்வொரு அறையாக திறந்து அவளுக்கு காட்டிக் கொண்டு வந்தான். ஒரு அறைக்குள் நுழைந்ததும் உள்ளே விளக்குகளை போட்டுவிட்டு, சற்றே குறும்பான குரலில் சொன்னான்.
"இந்த வீட்லயே இதுதான் ரொம்ப ஸ்பெஷலான ரூம் திவ்யா.. ஹாஹா.. நம்ம பெட்ரூம்..!!" வாயெல்லாம் பல்லாக சொல்லிவிட்டு கண்ணடித்தான். திவ்யா முகத்தை இறுக்கமாகவே வைத்திருக்க, திவாகர் தொடர்ந்தான்.
"நம்ம லைஃப்ல இந்த ரூம்லதான்.. நாம ரொம்ப நேரம் ஸ்பென்ட் பண்ண போறோம் ..!! ஹஹாஹஹாஹஹா..!!"
திவாகர் ஏதோ பெரிய ஜோக் அடித்தவன் போல சிரிக்க, திவ்யாவால் ஏனோ அந்த ஜோக்கை ரசிக்க முடியவில்லை. அவஸ்தையாக நெளிந்தாள். இப்போது திவாகர், அவளை நெருங்கி,
"உள்ள வா திவ்யா.. உனக்கு ஒன்னு காட்டுறேன்..!!" என்றவாறு திவ்யாவின் தோளில் கைபோட்டு அவளை அணைத்துக் கொண்டான். உடனே,
"ஐயோ.. எ..என்ன திவாகர் இது..?" திவ்யா பதறிப்போய் விலகிக்கொண்டாள்.
"ஏன்.. என்னாச்சு..?"
"இ..இல்ல.. ஒண்ணுல்ல.."
"அப்புறம் என்ன..? வா..!!" என்றவாறே அவன் மீண்டும் அணைத்துக் கொள்ள முயல, திவ்யா மீண்டும் விலகினாள்.
"நோ திவாகர்.. வேணாம்.."

"ஏன்..?" திவாகர் இப்போது முகம் சுருங்கிப் போனவனாய் கேட்டான்.
"எ..எனக்கு பிடிக்கலை.."
"அதான் ஏன்னு கேக்குறேன்.."
"எ..எனக்கு சொல்ல தெரியலை.. ஆனா வேணாம்..!!"
"கமான் திவ்யா.. என்ன நீ இப்படி வெட்கப்படுற..? வீ ஆர் லவ்வர்ஸ்..!! லவ் பண்றவங்க இந்த மாதிரி ஹக் பண்ணிக்கிறது.. கிஸ் பண்ணிக்கிறது.. எல்லாம் சகஜம்..!! கமான்..!!"
சொன்ன திவாகர் இப்போது மீண்டும் திவ்யாவை அணைத்துக்கொண்டான். ஆனால் இந்தமுறை அவள் விலகிவிட முடியாதபடி மிக இறுக்கமாக அவளை பிடித்திருந்தான். திவ்யா பதறினாள். 'ப்ளீஸ் திவாகர்..' என்றவாறு விலகிக்கொள்ள முயன்றாள். அவளால் முடியவில்லை. திமிறினாள். முடியவில்லை. வேறு வழியில்லாமல் கெஞ்சலாக சொன்னாள்.
"ப்ளீஸ் திவாகர்.. விட்ருங்க.. எ..எனக்கு பிடிக்கலை..!!"
"ஹாஹா.. எனக்கு பிடிச்சிருக்கே..? நான் விட மாட்டேன்.." திவாகர் பிடியை இன்னும் இறுக்கமாக்கினான்.
"ப்ளீஸ் திவாகர்.." திவ்யாவின் கண்களில் இப்போது நீர் துளிர்க்க ஆரம்பித்தது.
"நோ..!!"
"ப்ளீஸ்.."
"ஹாஹா.. என்ன நீ..? நான் தொடாம வேற யாரு உன்னை தொடப்போறாங்க..? எனக்கு இல்லாத உரிமையா..?"
என்று கேட்டவாறே திவாகர், தன் பிடிக்குள் சிக்கியிருந்த திவ்யாவின் முகத்தை நோக்கி குனிந்து முத்தமிட முயன்றான். அவ்வளவுதான்..!!! திவ்யாவுக்கு எங்கிருந்துதான் அப்படி ஒரு ஆவேசம் வந்ததோ. 'நோ..!!!!' என்று அலறியவாறே, திவாகரின் மார்பில் இரண்டு கைகளையும் ஊன்றி, அவனை பலமாக பின்னால் தள்ளிவிட்டாள். திவாகர் நிஜமாக அந்தமாதிரி ஒரு ஆவேசத்தை திவ்யாவிடம் இருந்து எதிர்பார்த்திருக்கவில்லை. நான்கு எட்டு பின்புறமாக தள்ளப்பட்டு, பின்பு தடுமாறி நின்றான். திவ்யா அப்புறமும் ஆவேசம் அடங்காதவளாய் கத்தினாள்.
"இல்லை.. உங்களுக்கு அந்த உரிமை இல்லை..!!!"
திவாகர் திகைத்துப் போனான். தன் காதில் வந்து விழுந்த வார்த்தைகளை நம்ப முடியாதவனாய் திவ்யாவையே பார்த்தான். பிறகு திணறலான குரலில் கேட்டான்.
"தி..திவ்யா.. எ..என்ன சொல்ற நீ..? நான் திவாகர்.. உ..உன்.. உன் காதலன்..!! எனக்கு உன்னை தொட உரிமை இல்லையா..??"
திவ்யா இப்போது எதுவும் சொல்லவில்லை. சில வினாடிகள் திவாகரின் முகத்தையே வெறித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய கண்களில் இருந்து இப்போது கண்ணீர் பெருமளவு கொட்டிக்கொண்டிருந்தது. படபடத்த உதடுகளை பற்களால் அழுத்தி கடித்து கொண்டாள். பதற்றத்தில் அவளுடைய மார்புகள் படுவேகமாய் மேலும் கீழும் ஏறி இறங்கிக் கொண்டிருந்தன. திவ்யா இப்போது தலையை குனிந்து கொண்டாள். கண்களை மூடிக்கொண்டாள். கொஞ்ச நேரம் அந்த மாதிரி அமைதியாக நின்றவாறே தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டாள்.
அப்புறம் தன் தலையை நிமிர்த்தி திவாகரை ஏறிட்டாள். அவளுடைய முகத்தில் இப்போது புதிதாக ஒரு தெளிவு பிறந்திருந்தது. தன் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டாள். மிகவும் தைரியமான, அதே நேரம் நிதானமான குரலில் திவாகரை கேட்டாள்.
"நீங்க ஏன் என்னை லவ் பண்றீங்க திவாகர்..?"
திவ்யாவின் அந்த கேள்வியை திவாகர் சுத்தமாக எதிர்பார்க்கவில்லை. திணறினான்.

"எ..என்ன கேள்வி இது..?"
"கேட்டதுக்கு பதில் சொல்லுங்க..!! என்னை ஏன் லவ் பண்றீங்க..?"
"எ..எனக்கு உன்னை பிடிக்கும்.."
"அதான்.. ஏன் என்னை பிடிக்கும்..?" திவ்யா கேள்விகளால் கிடுக்கிப்பிடி போட, திவாகர் உளற ஆரம்பித்தான்.
"நீ.. நீ அ..அழகா இருக்குற.."
"அப்புறம்..?"
"எனக்கு புடிச்ச மாதிரிலாம் நடந்துக்குற.."
"ம்ம்ம்.. அப்புறம்..??"
"அ..அப்புறம்.. நான் சொல்றதெல்லாம் செய்ற.."
"ம்ம்.. வேற..?"
"அ..அவ்ளோதான்..!! ஆமாம்.. இப்போ எதுக்கு இதெல்லாம் கேக்குற..?"
"ம்ம்ம்.. மொத்தத்துல.. நான் அழகா இருக்கேன்.. உங்களுக்கு பிடிச்ச மாதிரிலாம் நடந்துக்குறேன்.. நீங்க சொல்றதெல்லாம் செய்றேன்.. சரியா..??"
"நீ.. நீ என்ன சொல்ல வரேன்னு எனக்கு புரியலை திவ்யா.."
திவ்யா எங்கே வருகிறாள் என்றே திவாகருக்கு புரியவில்லை. குழப்பமாக அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். திவ்யாவோ அமைதியாக வேறெங்கோ வெறித்துக் கொண்டிருந்தாள். இப்போது அவளுடைய கண்களில் கண்ணீர் மீண்டும் துளிர்க்க ஆரம்பித்திருந்தது. சில வினாடிகள்..!! அப்புறம் கண்ணீர் வழியும் கண்களுடனே திவாகரின் பக்கம் திரும்பி பார்த்து சொன்னாள்.
"நான் அழகா இல்லாட்டி கூட.. ஒருத்தன் என்னை லவ் பண்ணுவான்.. தெரியுமா திவாகர்..? நீங்க சொன்னதெல்லாம் நான் செய்றேன்னு சொன்னீங்களே.. நான் சொன்னதெல்லாம் செய்றதுக்கு ஒருத்தன் இருக்கான்.. அது உங்களுக்கு தெரியுமா திவாகர்..?"
"தி..திவ்யா.." திவாகரிடம் இப்போது மெலிதாக ஒரு அதிர்ச்சி.
"சி..சின்ன வயசுல இருந்தே என்னை லவ் பண்றான்.. என் மேல உயிரையே வச்சிருக்கான்.. என் சந்தோஷத்துக்காக என்னவேணாலும் பண்ணுவான்..!! நான் அவனை அவ்வளவு ஹர்ட் பண்ணினப்புறமும்.. இன்னும் என்னையே நெனச்சுட்டு இருக்குற ஒரு பைத்தியக்காரன் இருக்கான் திவாகர்.. உங்களுக்கு தெரியுமா..?" சொல்லி முடிக்கும் முன்பே திவ்யா உடைந்து போய் 'ஓ..!!' வென அழ ஆரம்பித்தாள்.
"ஹேய்.. திவ்யா.. நீ ஏதோ தேவையில்லாம குழப்பிக்கிற.."
"இல்லை திவாகர்.. இப்போத்தான் நான் தெளிவா இருக்கேன்..!!"
"இங்க பாரு திவ்யா.. நான் உன்னை லவ் பண்றேன்.. எனக்கு.." திவாகர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, திவ்யா குறுக்கிட்டாள்.

"நோ திவாகர்.. நீங்க என்னை லவ் பண்ணலை..!! நான் நானாவே உங்ககிட்ட நடந்துக்கலையே..?? அப்புறம் எப்படி நீங்க என்னை லவ் பண்ணிருக்க முடியும்..?? உ..உங்களுக்கு என்னோட இந்த அழகு புடிக்குமா திவாகர்.. அது இன்னும் கொஞ்ச நாளைக்குத்தான் எங்கிட்ட இருக்கும்..!! இந்த ட்ரெஸ்.. இந்த மேக்கப்.. என் பேச்சு.. நான் உங்ககிட்ட நடந்துக்கிற விதம்.. இதெல்லாம் பிடிச்சிருக்கா..?? இது எல்லாமே அசோக் எனக்கு சொல்லிக் கொடுத்தது திவாகர்..!! இப்படி நடந்துக்கிட்டாத்தான் உங்களுக்கு பிடிக்கும்னு நான் போட்ட வேஷம்..!! நீங்க நெனைக்கிற திவ்யாவுக்கும், நிஜமான திவ்யாவுக்கும் நெறைய வித்தியாசம்.. நீங்க என்னை லவ் பண்ணலை..!!"
"தி..திவ்யா.. அப்படி சொல்லாத.. நீ.. நீ எப்படி இருந்தாலும் எனக்கு உன்னை பிடிச்சிருக்கும்..!!" திவாகர் சமாளிக்க முயன்றான்.
"இல்லை திவாகர்.. உங்களுக்கு பிடிக்காது..!! உங்களுக்கு பிடிச்ச மாதிரி நான் நடந்துக்கிட்டாத்தான் உங்களுக்கு பிடிக்கும்.. நீங்க சொல்றதெல்லாம் நான் செஞ்சாத்தான் என்னை உங்களுக்கு பிடிக்கும்..!! கொஞ்ச நேரம் முன்னாடி அந்த ஜூஸ் சாப்பிட்டோமே.. அப்போ..!! அது ஒரு சின்ன சாம்பிள்..!! ஆனா.. அசோக்கோட லவ் அப்படி இல்லை..!!" இப்போது திவாகர் சற்றே எரிச்சலானான்.
"இங்க பாரு.. அவன் லவ் எப்படி வேணா இருந்துட்டு போட்டும்.. ஆனா நீ என்னைத்தான் லவ் பண்ற.. அதை ஞாபகம் வச்சுக்கோ..!!"
"இல்லை திவாகர்.. நான் உங்களை லவ் பண்ணலை..!!" திவ்யா பட்டென சொல்ல, திவாகர் அதிர்ந்து போனான்.
"தி..திவ்யா.. என்ன சொல்ற நீ..?"
"ஆமாம் திவாகர்..!! காக்கா குருவின்னா இப்படித்தான் இருக்கும்ன்ற மாதிரி.. காதலும் இப்படித்தான்னு நானா அதுக்கு ஒரு வடிவம் கொடுத்துட்டேன்..!! இந்த மாதிரி ஒரு ஆளோடதான் எனக்கு காதல் வரப் போகுதுன்னு.. முன்னாடியே நானா ஒரு லிஸ்ட் போட்டுக்கிட்டேன்.. அந்த லிஸ்ட்ல இருக்குற குவாலிட்டியோட உங்களை பார்த்ததும் எனக்கு உங்க மேல ஒரு அட்ராக்ஷன்..!! அதை லவ்வுன்னு தப்பா புரிஞ்சுக்கிட்டேன்..!! ஆனா.. நாலும் நாலும் சேர்ந்தா எட்டுன்னு கணக்கு போடுற மாதிரி.. காதல் இல்லைன்னு இப்போ எனக்கு நல்லா புரிஞ்சு போச்சு..!!"
"திவ்யா.. நீ அவசரப் படுற.."
"ம்ஹூம்.. நான் ரொம்ப நிதானமா இருக்கேன் திவாகர்..!! உங்களை பிரிஞ்சு இருக்கணும்னு ரெண்டு தடவை அசோக் எங்கிட்ட சொல்லிருக்கான்.. மொத தடவை நான் ஒண்ணுமே சொல்லலை.. ரெண்டாவது தடவை கொஞ்சம் அடம் புடிச்சேன்.. ஆனா ஒத்துக்கிட்டேன்..!! ரெண்டு தடவையும் எதையோ இழந்துட்ட மாதிரி ஒரு ஃபீல் எனக்கு இருந்தது என்னவோ உண்மைதான்.. ஆனா.. என்னால உங்களை பிரிஞ்சு இருக்க முடிஞ்சது.. வேற எந்த குழப்பமும் இல்லாம இருக்க முடிஞ்சது.. ஏன்னா.. அப்போலாம் என்கூட அசோக் இருந்தான்..!! ஆனா இப்போ.. அவனைப் பிரிஞ்சு இந்த பத்து நாள்.. என்னால முடியலை திவாகர்.. சத்தியமா என்னால முடியலை..!!" திவ்யா அழ ஆரம்பித்தாள்.
"திவ்யா.."
"இவ்வளவுக்கும் அவன் தப்பு பண்ணிருக்கான்.. நம்மை பிரிக்க ஏதோ சதி பண்ணிருக்கான்னு நம்புனேன்.. அப்படி இருந்தும் என் மனசு அவன் பின்னாடியே ஓடுதே..? அது ஏன் திவாகர்..??"
"ப்ளீஸ் திவ்யா.. நான் சொல்றதை கொஞ்சம் கேளு.."
"அவன் என்னை தொடுறப்போ.. அவனோட ஸ்பரிசத்துல கெடைக்கிற அந்த ஸ்நேஹ உணர்வு.. உங்க ஸ்பரிசத்துல எனக்கு கிடைக்கலையே.. அது ஏன்..?? அவன் நெஞ்சுல சாஞ்சுக்குறப்போ கெடைக்கிற அந்த அமைதி, அந்த நிம்மதி, அந்த பாதுகாப்பு உணர்வு.. அது வேற யார்கிட்டயும் கெடைக்காதுன்னு எனக்கு இப்போ நல்லா தெரிஞ்சு போச்சு திவாகர்..!!"
"ஓஹோ..?? இப்போ முடிவா என்னதான் சொல்ல வர்ற நீ..?" திவாகர் இப்போது பொறுமை இழந்தவனாய் கேட்டான்.
"இன்னுமா உங்களுக்கு புரியலை..?? நான் அசோக்கை லவ் பண்றேன் திவாகர்..!!! எஸ்..!!! ஐ லவ் அசோக்.. ஐ லவ் ஹிம்..!!!" திவ்யா சற்றுமுன் சித்ரா தன்னிடம் சொன்ன மாதிரி.. திவாகரின் பொட்டில் அறைந்த மாதிரி.. சொன்னாள்.. இல்லை.. கத்தினாள்..!!
திவ்யா அந்த மாதிரி உறுதியாகவும் ஆவேசமாகவும் கத்த, திவாகர் ஸ்தம்பித்துப் போனான். அதிர்ந்து போனவனாய் திவ்யாவின் முகத்தையே சில வினாடிகள் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான். பார்க்க பார்க்க அவனுடைய முகம் கொஞ்சம் கொஞ்சமாய் மாறியது. ஒரு மாதிரி வெறுப்பை திவ்யாவின் மீது உமிழ்ந்தது.
தன் கால்களை மெல்ல பின்னால் அடியெடுத்து வைத்து, பின்பக்கமாக நகர்ந்தான். கையால் தடவி, அந்த அறையின் சுவற்றோடு பொருத்தப்பட்டிருந்த கப்போர்டை திறந்தான். உள்ளே இருந்த அந்த விஸ்கி பாட்டிலையும், க்ளாசையும் எடுத்தான். அவனுடய செய்கையை பார்த்து திவ்யா திகைத்துக் கொண்டிருக்கும்போதே, கிளாசில் கொஞ்சம் விஸ்கியை ஊற்றி அப்படியே உள்ளுக்குள் சரித்துக் கொண்டான். மீண்டும் ஒருமுறை க்ளாஸை விஸ்கியால் அவன் நிரப்ப, திவ்யாவுக்கு இப்போது உதறல் எடுக்க ஆரம்பித்தது.
"இ..இங்க பாருங்க திவாகர்.. உங்க கோவம் நியாயந்தான்.. நான் செஞ்சது தப்புதான்.. உங்க மேல இருந்த அட்ராக்ஷனை காதல்னு நம்பி.. உங்களையும் நெறைய குழப்பி விட்டுட்டேன்.. உங்க மனசுல ஆசையை வளர்த்துக்க நான் காரணமா இருந்துட்டேன்..!! நான் செஞ்சது தப்புதான்.. அதுக்கு என்னை மன்னிச்சுடுங்க..!!" திவ்யா தன் இரண்டு கைகளையும் கூப்பி கெஞ்சினாள். திவாகரோ அமைதியாக விஸ்கி பருகினான். திவ்யா தொடர்ந்தாள்.
"ஆனா.. நான் வேணும்னே அப்படி செய்யலை.. என் மனசறிஞ்சு செய்யலை.. அசோக் மேல எனக்கு இருந்த காதலை.. இன்னைக்குத்தான் நானே உணர்ந்தேன்.. நீங்க பெரிய மனசு பண்ணி.." திவ்யா சொல்லிக் கொண்டிருக்கும்போதே,
"ஏய்.. ச்சீய்.. நிறுத்துடி.."

திவாகர் கத்தினான். திவ்யா அதிர்ந்து போனாள். மிரட்சியாக திவாகரையே பார்த்தாள். திவாகர் இப்போது விஸ்கி பாட்டிலை விட்டுவிட்டு, திவ்யாவை நோக்கி மெல்ல நகர்ந்தான். அவன் பார்வையில் இருந்த குரூரம் திவ்யாவை மிரள செய்தது. மெல்ல பின்வாங்கினாள்.
"தி..திவாகர் ப்ளீஸ்.. நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க.."
"அதான் எல்லாம் சொல்லிட்டியே.. இன்னும் என்ன சொல்லப் போற..? ம்ம்ம்ம்... என்னடி சொன்ன..? நீ என்னை லவ் பண்ணலையா..? நீ என்னடி சொல்றது.. நான் சொல்றேன்.. நான் உன்னை லவ் பண்ணலைடி..!! எனக்கு உன் உடம்பு மேலதான் ஆசை.. போதுமா..??"
"தி..திவாகர்.."
"நான் பாட்டுக்கு என் பிசினஸை பாத்துட்டு இருந்தேண்டி..!! நீயா வந்த.. கொஞ்சி கொஞ்சி பேசுன.. ஃபோட்டோ அனுப்பி 'என்னையும் பாருங்க.. என் அழகையும் பாருங்க'ன்னு ஆட்டுன.. நான் இழுத்த இழுப்புக்குலாம் வந்த..!! உன் மேல இருந்த ஆசைல.. நான் என் வேலையெல்லாம் விட்டுட்டு உன் பின்னாடி அலைஞ்சுட்டு இருந்தேன்.. உன்னால எனக்கு எவ்வளவு டென்ஷன்.. எவ்வளவு கஷ்டம் தெரியுமா..? இப்போ திடீர்னு வந்து.. நான் இன்னொருத்தன் கூட போறேன்னு நீ சொன்னா.. நான் என்ன வெரல் சப்பிக்கிட்டு வேடிக்கை பாக்கணுமா..?"
"தி..திவாகர்.. உங்க பேச்சே சரியில்லை.. எனக்கு பயமா இருக்கு.. தயவு செஞ்சு என்னை வெளில போக விடுங்க..!!"
"வெளில போகனுமா..?? சரி.. இத்தனை நாள் நான் சொன்னதெல்லாம் செஞ்சேல..? கடைசியா ஒன்னு சொல்றேன்.. அதையும் செஞ்சுடு.. நானே உன் வீட்டுல கொண்டு போய் உன்னை ட்ராப் பண்றேன்..!!" திவாகர் சற்றே கிண்டலான குரலில் சொல்ல,
"எ..என்ன..?" திவ்யா மிரட்சியாக கேட்டாள்.
"நம்ம லைஃப்ல இந்த ரூம்லதான், ரொம்ப நேரம் ஸ்பென்ட் பண்ண போறோம்னு கொஞ்ச நேரம் முன்னாடி சொன்னேன்ல..? ரொம்பலாம் வேணாம்.. ஒரு.. ஒரே ஒரு மணி நேரம்.. என்கூட அந்த பெட்ல ஸ்பென்ட் பண்ணிட்டு போ..!!" திவாகர் சொல்லி முடிக்கும் முன்பே,
"ச்சீய்...!!!" என்று திவ்யா வெறுப்பாக கத்தினாள். திவாகரோ எரிச்சலானான்.
"என்னடி கத்துற.. உனக்கு புடிக்குதோ புடிக்கலையோ.. இன்னைக்கு நீ என்கூட படுத்துத்தான் ஆகணும்.. வா..!!"
திவாகர் ஒரே பாய்ச்சலாய் பாய்ந்து திவ்யாவை எட்டி பிடித்தான். முரட்டுத்தனமாய் அவளை இறுக்கி அணைத்தான். மூர்க்கமானவனாய் அவளுடைய கழுத்தில் தன் முகத்தை வைத்து தேய்த்தான். திவ்யா பதறிப் போனாள். அலறினாள்.
"ஆஆ.. திவாகர்.. வேணாம்.. ப்ளீஸ்..!!"
"ஹாஹா.. வேணாமா..?? பிடிக்கலையா உனக்கு..?? ஆனா எனக்கு பிடிச்சிருக்கே..??"
"உ..உங்களை கெஞ்சிக் கேக்குறேன்.. என்னை விட்ருங்க திவாகர்.. நான் அசோக்குக்கு சொந்தமானவ..!!" அழுதாள்.
"இன்னும் கொஞ்ச நேரம் நீ எனக்குத்தான்டி சொந்தம்..!! அவன்தான் நீ எப்படி இருந்தாலும் உன்னை லவ் பண்ணுவான்னு சொன்னேல.. என்கூட ஒருமணி நேரம் இருந்துட்டு போ.. என்ன சொல்றான்னு பாக்கலாம்..!!"
"ப்ளீஸ்.. திவாகர்.."
"இதெல்லாம் பாத்துத்தாண்டி நான் பைத்தியக்காரன் ஆயிட்டேன்.." வக்கிரமாக இளித்த திவாகர், திவ்யாவின் ஒருபக்க மார்பை கொத்தாகப் பற்றி, வெறித்தனமாக பிசைய,
"ஆஆஆஆஆ...!!!"
திவ்யா வலி தாளாமல் அலறினாள். திவாகர் எந்த அளவுக்கு ஒரு கொடிய மிருகம் என்பதை கொஞ்ச நேரத்திலேயே உணர்ந்து கொண்டாள். இந்த மிருகத்திடம் இருந்து தப்பித்தே ஆகவேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். உடனே தன்னை இறுக்கியிருந்த திவாகரின் புஜத்தை வாயால் கவ்வி கடித்தாள்.

"ஆஆஆஆஆ...!!!"
இப்போது திவாகர் வலி தாளாமல் அலறினான். திவ்யாவிடம் இருந்து விலகிக் கொள்ள முயன்றான். அவள் கடித்த கடியை விடாமல் இருக்க, ஆவேசமாய் அவளை அப்படியே பின்னால் பிடித்து தள்ளிவிட்டான். திவ்யா தடுமாறிப்போய் பின்புறமாக சரிந்தாள். கால்கள் இடற மெத்தையில் சென்று பொத்தென்று விழுந்தாள். திவாகர் இப்போது உச்சபட்ச ஆத்திரத்தில் இருந்தான். பற்களை கடித்து கத்தினான்.
"எவ்வளவு திமிர்டி உனக்கு..?? பொட்டச்சி நீ.. உன் வீரத்தை எங்கிட்ட காட்டுறியா..? இப்போ நான் என் ஆம்பளை வீரத்தை காட்டுறேன்.. உன்னால தாங்க முடியுதான்னு பார்க்கலாம்.."
கொக்கரித்த திவாகர் வெறியுடன் திவ்யா மீது பாய்ந்தான். ஆத்திரம் அவன் கண்ணை மறைத்திருந்தது. திவ்யாவின் அழகு மீதிருந்த வெறி அவனை குருடனாக்கியிருக்க வேண்டும். அதனால்தான் திவ்யாவின் கையில் என்ன இருக்கிறது என்பதை கூட அவன் கவனிக்கவில்லை. மெத்தையில் தள்ளிவிடப்பட்ட திவ்யாவின் கையில் இப்போது புதிதாக ஒன்று முளைத்திருந்தது. அது.. திவாகரின் பாக்கெட்டில் செருகியிருந்த பால்பாயின்ட் பேனா..!!
திவ்யா கொஞ்சம் கூட யோசிக்கவில்லை. தன் வலது கையில் சிக்கியிருந்த அந்த பேனாவை இறுகப் பற்றினாள். சரக்கென கையை வீசி, தன் மீது பாய்ந்த திவாகரின் முகத்தில் குத்தினாள். வேகமாக வீசப்பட்ட பேனாவின் கூர்மையான முனை, திவாகரின் கன்னத்தில் குத்தி துளையிட்டது. சிவப்பு இரத்தில் ரத்தம், அவன் கன்னத்தில் இருந்து தெறித்து ஓடியது.
அவ்வளவுதான்..!! திவாகர் 'ஆஆஆஆஆ..!!' என வலியை தாங்க முடியாமல் அலறினான். கன்னத்தை பிடித்து கத்தியவாறு திவ்யாவின் மீதிருந்து எழுந்தான். கண்களை இறுக்கி மூடிக்கொண்டு காட்டுத்தனமாக கத்தினான். நிற்க முடியாமல் தள்ளாடினான். அறைக்குள் இருந்த பொருட்களை எல்லாம் சராமாரியாக கீழே தள்ளி விட்டான். அப்புறம் கால்கள் இடற.. தரையில் விழுந்து.. கன்னத்தை பிடித்துக்கொண்டு கதற ஆரம்பித்தான்.
திவ்யா எழுந்தாள். கீழே கிடந்தது துடிக்கும் திவாகரையே வெறுப்பாக ஒரு பார்வை பார்த்தாள். வலியை தாளாமல் வாய் திறந்து அலறிக் கொண்டிருந்த திவாகரிடம் இறுக்கமான குரலில் சொன்னாள்.
"தேங்க்ஸ் ஃபார் யுவர் பென்.. திவாகர்..!!"
தான் முதன்முதலாக திவாகரை பார்த்தபோது வெட்கத்துடன் சொன்ன அதே வார்த்தைகளையே, இப்போது அவர்களது இறுதி சந்திப்பின் இறுதி வார்த்தைகளாய், வெறுப்புடன் உமிழ்ந்துவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறினாள்.
கேட் திறந்து வெளியேறிய திவ்யா சிட்டாக பறக்க ஆரம்பித்தாள். சுற்றிலும் இருள் அப்பிக் கிடந்தது. எது எந்த திசை என்று அவளுக்கு சுத்தமாக பிடிபடவில்லை. கால்கள் சென்ற திசையில் அசுர வேகத்தில் ஓடினாள். காலில் செருப்பில்லாமல்.. கல்லும், முள்ளும் குத்துவதை பொருட்படுத்தாமல்.. ஓடினாள். அவ்வப்போது திரும்பி, திவாகர் தன்னை தொடர்ந்து வருவானோ என்று பயத்துடன் பார்த்துக்கொண்டே ஓடினாள். அப்படி ஒருமுறை திரும்பி பார்த்தபோதுதான், எதிரே வந்த காரை கவனிக்காமல் குறுக்கே ஓடினாள். கார் உடனே ப்ரேக் அடித்து நின்றும், அதன் மீது மோதி தூக்கி எறியப்பட்டாள்.
அத்தியாயம் 33
சித்ராவும், கார்த்திக்கும் அமைதியாக அமர்ந்திருந்தார்கள். ஆளுக்கொரு திசையை வெறித்து பார்த்தவாறு அமர்ந்திருந்தார்கள். சித்ரா கண்களில் வழிந்த நீரை மீண்டும் ஒருமுறை துடைத்துக் கொண்டாள். கார்த்திக் தாடையை சொறிந்தவாறு தீவிர யோசனையில் இருந்தான்.
சற்றுமுன் ஆபீஸில் இருந்து வீடு திரும்பிய கார்த்திக், மனைவி அமர்ந்திருந்த கோலத்தை கண்டு திகைத்துப் போனான். கண்களில் வழியும் நீரோடு எங்கேயோ வெறித்துப் பார்த்தவாறு அமர்ந்திருந்த மனைவியைப் பார்த்து பதறிப் போனான். 'ஏய்.. என்னடி.. என்னாச்சு.. ஏன் இப்படி உக்காந்திருக்குற..?' என்று கார்த்திக் கேட்டதுதான் தாமதம். அத்தனை நாட்களாய் அவனிடம் இருந்து மறைத்து வைத்த மொத்த ரகசியத்தையும் சித்ரா அவனிடம் கொட்ட ஆரம்பித்தாள். அசோக்கின் காதல் பற்றி.. திவ்யாவின் காதல் பற்றி.. அசோக்குக்கும், திவ்யாவுக்கும் ஏற்ப்பட்ட பிணக்கு பற்றி.. எல்லாவற்றையும் சொல்லிவிட்டாள்.
கார்த்திக்கும் எல்லா விஷயங்களையும் அமைதியாக கேட்டுக் கொண்டான். அவனுக்கு நிறைய விஷயங்கள் புதிதாக இருந்தன. 'இப்படியெல்லாம் நடந்திருக்கிறதா..' என நிறைய ஆச்சரியம் அவனுக்கு..!! சித்ரா எல்லாம் சொல்லி முடிக்க.. கார்த்திக் எல்லாம் கேட்டுக்கொள்ள.. அதன் பிறகுதான் இருவரும் இந்தமாதிரி அமர்ந்திருக்கிறார்கள். தொண்டையை செருமிக்கொண்டு கார்த்திக் மெல்ல ஆரம்பித்தான்.
"ம்ம்ம்.. இவ்வளவு நடந்திருக்கு.. எல்லாரும் எங்கிட்ட இருந்து மறைச்சுட்டீங்களே..?"
"நான்தான் சொல்றேன்ல.. இது இவ்வளவு சீரியஸா போகும்னு நான் நெனைக்கவே இல்ல.."
"சரி.. பரவால விடு.. இப்போவாவது சொன்னியே..!! ஆமாம்.. இப்போ அவ எங்க போயிருக்கா..?"
"அந்தப்பையனை பாக்கத்தான் போயிருக்கா.. நான் சொல்ல சொல்ல கேட்காம..!!"
"ம்ம்.. வரட்டும்.. நான் அவகிட்ட பேசிக்கிறேன்.. அவ மனசுல என்னதான் நெனச்சிருக்கான்னு தெரியலை..!! ஆளாளுக்கு செல்லம் குடுத்து ரொம்ப கெட்டுப் போயிட்டா..!! வரட்டும்.. நான் இன்னைக்கு நல்லா கேக்குறேன்.. அசோக்கை விட நல்ல பையன் வேற எவன் கெடைப்பான்னு கேக்குறேன்..!!"
"இங்க பாருங்க.. அவகிட்ட கொஞ்சம் பொறுமையா பேசுங்க..!! நான் இறங்கிப்போய் பேசுனா அவ கேட்பான்னு நெனச்சேன்.. ஆனா.. ஆனா அவ.. என்னை கொஞ்சம் கூட மதிக்கலை..!! கடைசி வரை.. மூடுன வாயை தெறக்காமலே போயிட்டா..!! நீங்க கோவப்பட்டு.. அப்புறம் அவ ஏடாகூடமா ஏதாவது முடிவு எடுத்துடப் போறா.. கொஞ்சம் பார்த்து பேசுங்க..!!"

"ப்ச்.. அதெல்லாம் நான் பாத்துக்குறேன்.. நீ விடு..!! அசோக்கை கட்டிக்க அவளை சம்மதிக்க வைக்கவேண்டியது என் பொறுப்பு..!!"
"அப்படி மட்டும் நீங்க செஞ்சிட்டீங்கன்னா.. என் மனசுல இருக்குற பாரம் இறங்கிடும்.. நிம்மதியா இருப்பேன்..!!"
சித்ரா சொல்லிக் கொண்டிருக்கும்போதுதான் காலிங்பெல் அடித்தது. உடனே எழப்போன சித்ராவை கார்த்திக் தடுத்தான்.
"நீ இரு.. நான் போய் பாக்குறேன்.."
ஹாலுக்கு வந்து கதவை திறந்த கார்த்திக் அதிர்ந்து போனான். வெளியே அவர்கள் நின்றிருந்தார்கள். திவ்யாவின் கல்லூரி தோழி அஞ்சு, அவளுடைய வழுக்கைத்தலை அப்பா, அவர்கள் தாங்கிப்பிடிக்க நின்றிருந்த சோர்ந்து போன திவ்யா.
"தி..திவ்யா.. திவ்யா என்னாச்சும்மா..?"
கார்த்திக் பதற்றமாக கேட்க, அவள் பதிலளிக்கவில்லை. கண்கள் செருகிப் போய் அண்ணனையே பரிதாபமாக பார்த்தாள். கார்த்திக் அஞ்சுவை ஏற்கனவே அறிந்திருந்தான். ஓரிருமுறை திவ்யாவுடன் வீட்டுக்கு வந்திருக்கிறாள். இப்போது அஞ்சுவிடம் திரும்பி கவலையாக கேட்டான்.
"எ..என்னம்மா... என்னாச்சு என் தங்கச்சிக்கு..?"
"பயப்படுறதுக்கு ஒன்னுல்லண்ணா.. கார்ல வந்துட்டு இருந்தோம்.. குறுக்க வந்து விழுந்துட்டா..!! அடிலாம் ஒன்னும் படலை.. எப்படி குறுக்க வந்து விழுந்தேன்னு கேட்டா எதுவும் பேச மாட்டேன்றா..!! கொஞ்சம் பயந்த மாதிரி இருக்குறா.. டயர்டா வேற இருக்குறா.. படுத்து கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா.. எல்லாம் சரியாப் போயிடும்னு நெனைக்கிறேன்..!!"
கார்த்திக் திவ்யாவை தாங்கிப் பிடித்துக் கொண்டான். அதற்குள் உள்ளறைக்குள் இருந்து பதறிப்போய் எழுந்து ஓடிவந்திருந்த சித்ரா, அவளை இன்னொரு பக்கம் தாங்கிப் பிடித்துக் கொண்டாள். கார்த்திக்கும், சித்ராவும் கைத்தாங்கலாக திவ்யாவை அழைத்து சென்றார்கள். திவ்யாவுடைய அறைக்கு அழைத்து சென்று அவளை படுக்கையில் படுக்க வைத்தார்கள். தங்கையின் நிலையை தாங்கமுடியாமல் அவளுடைய கன்னத்தை வருடியபடி கார்த்திக் கேட்டான்.
"தி..திவ்யா.. என்னம்மா ஆச்சு..?"
"எனக்கு ஒன்னுல்லண்ணா.. ஐ'ஆம் ஆல்ரைட்..!! என்னை கொஞ்ச நேரம் தனியா.. நிம்மதியா இருக்க விடுங்க.. ப்ளீஸ்..!!"
அதன்பிறகு கார்த்திக் எதுவும் பேசவில்லை. திவ்யாவை அவளுடைய அறையில் விட்டுவிட்டு இருவரும் வெளியே வந்தார்கள். சரியான நேரத்தில் வந்து.. திவ்யாவுக்கு உதவி செய்து.. பொறுப்பாக வீட்டில் கொண்டு வந்து ஒப்படைத்த.. அஞ்சுவுக்கும், அவள் அப்பாவிற்கும்.. இருவரும் மனமார நன்றி சொல்லிக் கொண்டார்கள்.
அதன்பிறகு ஒருமணி நேரம் கழித்து..
சித்ரா வீட்டு வேலை எல்லாம் முடித்துவிட்டாள். சாப்பிட்ட பாத்திரங்கள் எல்லாவற்றையும் இப்போதுதான் கழுவி அடுக்கி வைத்தாள். ஒரு ஜக் நிறைய தண்ணீர் பிடித்துக்கொண்டு கிச்சன் விட்டு வெளியே வந்தாள். தங்கள் பெட்ரூமுக்கு சென்றாள். அதற்குள் தூங்க ஆரம்பித்திருந்த கார்த்திக்கிடம் இருந்து மெலிதான குறட்டை ஒலி வந்துகொண்டிருந்தது. ஜக்கை ஒரு டேபிள் மீது வைத்துவிட்டு தானும் உறங்கலாம் என்றுதான் முதலில் கட்டிலில் அமர்ந்தாள்.
அப்புறம் ஏதோ நினைத்தவளாய் எழுந்துகொண்டாள். தங்கள் அறையை விட்டு வெளியே வந்தாள். திவ்யாவின் அறையை நோக்கி நடந்தாள். திவ்யாவின் அறைக்குள் புகுந்தவள், சுவற்றை தேய்த்து குழல்விளக்கை உயிர்ப்பித்தாள். கட்டில் மீது பார்வையை வீசினாள்.
கட்டிலில் திவ்யா குழந்தை மாதிரி தூங்கிக் கொண்டிருந்தாள். வாயை 'ஓ'வென திறந்து வைத்துக்கொண்டு, அசந்து போய் நித்திரையில் ஆழ்ந்திருந்தாள். அவளுக்கு அருகே சென்ற சித்ரா சில வினாடிகள் அவளுடைய மாசுமருவற்ற முகத்தையே அமைதியாக பார்த்தாள்.
'என்னாயிற்று இவளுக்கு..? ஏன் இப்படி இருக்கிறாள்..? கசக்கிப்போட்ட காகிதமாய் வந்து கிடக்கிறாளே..? என்னாயிற்று என்று கேட்டாலும் சொல்ல மாட்டேன் என்கிறாள்..!! ரொம்பத்தான் நெஞ்சழுத்தம் இவளுக்கு..!! இல்லாவிட்டால், நான் அவ்வளவு தூரம் இறங்கி வந்து பேசியும் வாயை இறுக்க மூடிக் கொண்டிருப்பாளா..? அப்படி என்ன பிடிவாதம் இவளுக்கு..?? அழுத்தக்காரி.. ராட்சஸி..!!'
மனதுக்குள் திவ்யாவை திட்டியவாறே, ஓரமாய் கிடந்த போர்வையை எடுத்து, சித்ரா திவ்யாவுக்கு போர்த்தி விட்டாள். அவளுடைய கால்களை மென்மையாக உயர்த்தி அதனடியில் ஒரு தலையணையை திணித்தாள். அறை வாசலை நோக்கி நடந்தாள். விளக்கை அணைக்க சித்ரா கையை உயர்த்திய போதுதான், அவளுக்கு பின்னால் இருந்து ஈனஸ்வரத்தில் அந்த குரல் கேட்டது.
"அண்ணீ..!!!!!"

சித்ராவுக்கு ஒருகணம் எதுவும் புரியவில்லை. 'எங்கிருந்து வருகிறது இந்தக்குரல்..?' மெல்ல திரும்பி பார்த்தாள். படுக்கையில்.. உறங்கியிருந்த திவ்யா இப்போது விழிகளை திறந்திருந்தாள். ஆனால் இன்னும் அந்த விழிகள் சோர்வாகவே செருகியிருந்தன. 'இவளா அப்படி அழைத்தாள்..?' என சித்ரா திகைத்துக் கொண்டிருக்கும்போதே, திவ்யா மீண்டும் சித்ராவை அழைத்தாள்.
"அண்ணீ..!!!!!"
அவ்வளவுதான்..!! சித்ரா அப்படியே சிலிர்த்துப் போனாள்..!! ஜிவ்வென்று உடம்பெல்லாம் புது ரத்தம் பாய்ச்சிய மாதிரி ஒரு சிலிர்ப்பு அவளுக்கு..!! முதன்முறையாக யாரோ அவளை அப்படி அழைக்கிறார்கள்..!! இத்தனை நாட்களாய் தன்முன் வாய்திறக்காமலே இருந்த திவ்யா, முதன்முறையாக அவளை அழைக்கிறாள்.. அன்பு ஒழுக..!! அதுவும் பசியாகிப்போன கன்று ஒன்று தாய்ப்பசுவை அழைப்பது போல, ஏக்கமாக அழைக்கிறாள்..!! எப்படி இருக்கும் சித்ராவுக்கு..?? அவளுடைய கண்கள் பட்டென கலங்கிப் போயின. சிலிர்த்துப்போன உடல் இப்போது வெடவெடவென நடுங்கியது..!! அதற்குள் திவ்யா படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்து..
"என்னை மன்னிச்சுடுங்க அண்ணி..!!"
என்று ஒரு கையை நீட்டி பரிதாபமாக சொல்லவும், சித்ரா அப்படியே உருகிப் போனாள். ஓடிப்போய் அவளை வாரி அணைத்துக் கொண்டாள். அழுகையை அடக்க முடியாமல், தழதழத்த குரலில் சொன்னாள்.
"ஏய்.. ச்சீய்.. என்னடி நீ..?? நீ எதுக்கு மன்னிப்பு கேக்குற..?? நீ என்ன தப்பு செஞ்ச..??"
"இல்ல அண்ணி.. நான் நெறைய தப்பு பண்ணிட்டேன்..!! யார் நல்லவங்க.. யார் கெட்டவங்கன்னு கூட புரிஞ்சுக்காம.. நெறைய தப்பு பண்ணிட்டேன்..!! எல்லாருக்கும் கஷ்டம் கொடுத்திட்டேன்..!!" சொல்லும்போதே திவ்யாவின் கண்களில் நீர் ஒழுக ஆரம்பித்தது.
"ப்ச்.. அதுலாம் ஒண்ணுல்ல திவ்யா..!! அழாத.. கண்ணை தொடைச்சுக்கோ ..!!" சொன்ன சித்ரா அவளே திவ்யாவின் கண்களை துடைத்தாள்.
"உ..உங்களைக்கூட இத்தனை நாளா நான் புரிஞ்சுக்கலை அண்ணி.."
"ஐயோ.. அதெல்லாம் எதுக்கு இப்போ.. நீ எங்கிட்ட பேசுறதே எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா..?"
"எனக்கு உங்ககிட்ட பேசனும்னுதான் ஆசை அண்ணி.. ஆனா.. ஏதோ ஒன்னு வந்து என்னை தடுத்துடும்..!! சின்ன வயசுல நாம போட்ட சண்டை.. உங்க கூட பேசமாட்டேன்னு நான் சில்லித்தனமா போட்ட சபதம்..!! அந்த சபதத்தை எப்படியாவது காப்பாத்தனும்னு ஏதோ ஒரு பிடிவாதம்.. மத்தபடி உங்கமேல எனக்கு எந்த கோவமும் இல்ல அண்ணி..!!"
"எனக்கு தெரியும் திவ்யா.. எனக்கு தெரியும்..!!"
சித்ரா திவ்யாவை அணைத்துக்கொண்டாள். இருவரும் ஒருவர் தோளில் இன்னொருவர் முகம் சாய்த்தவாறு அமர்ந்திருந்தார்கள். சித்ரா ஆதரவாக திவ்யாவின் முதுகை வருடிக் கொடுக்க, திவ்யா அமைதியாக கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தாள். சில வினாடிகள்..!! அப்புறம் திவ்யா திடீரென கேட்டாள்.
"அசோக் என் மேல கோவமா இருக்கானா அண்ணி..?"
"ச்சேச்சே.. அப்டிலாம் ஒண்ணுல்ல.."
"இல்ல.. அவனுக்கு என் மேல கோவம் இருக்கும்.. உங்ககிட்ட சொல்லிருக்க மாட்டான்..!! அழுத்தக்காரன்.. அவன் லவ்வையே இத்தனை நாளா எங்கிட்ட சொல்லாம மறைச்சவன்தான..?"
"ப்ச்.. நான்தான் சொல்றேன்ல..? அவனுக்கு உன் மேல கோவம்லாம் ஒண்ணுல்ல திவ்யா..!!"
"இருக்கும் அண்ணி.. கண்டிப்பா இருக்கும்..!! நான் அவனை என்னெல்லாம் சொல்லிட்டேன்..? செருப்பால அறைஞ்ச மாதிரி எப்படிலாம் பேசிட்டேன்..? அவன் எப்படி துடிச்சு போயிருப்பான்..?? கண்டிப்பா அவனுக்கு என் மேல கோவம் இருக்கும்..!!" திவ்யா அழுதவாறே சொல்ல,
"ச்சே.. என்ன பேசுற நீ..? அ..அவன்.. அவனுக்கு உன் மேல கோவமே வராது திவ்யா.. அவன் உன் மேல எவ்வளவு ப்ரியம் வச்சிருக்கான்னு உனக்கு தெரியாது..!!"
"தெரியும் அண்ணி.. என் மேல அவன் உயிரையே வச்சிருக்கான்.. எனக்கு நல்லா தெரியும்..!! அதான்.. அவனை காயப்படுத்திட்டேன்னு எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு..!!"

"நீ தேவையில்லாம மனசை போட்டு கொழப்பிக்கிற திவ்யா.. அதுக்குலாம் அவசியமே இல்ல..!!"
"இல்ல அண்ணி.. அவன் இதுவரை எனக்கு எவ்வளவோ நல்லது செஞ்சிருக்கான்.. எனக்கு சிரிப்பும், சந்தோஷமும் மட்டுந்தான் கொடுத்திருக்கான்..!! ஆனா நான் அவனுக்கு கொடுத்ததுலாம்.. கஷ்டமும், வலியும், வேதனையுந்தான்..!! அவன் என்னை ஏத்துப்பான்ல அண்ணி..?" திவ்யா பரிதாபமாக கேட்க, சித்ரா உருகிப் போனாள்.
"ஏய்.. தி..திவ்யா.."
"நான் அவன் கால்ல விழுந்து கெஞ்சினா.. என்னை ஏத்துப்பான்ல அண்ணி..?" திவ்யா உடைந்து போய் அழுதாள்.
"ப்ச்.. பைத்தியம் மாதிரி ஏதாவது உளறாத திவ்யா..!! நீ ஏதோ ரொம்ப கொழம்பி போய் இருக்குற.. பேசாம படுத்து தூங்கு..!! காலைல அவனைப் பாத்து பேசு.. காலுலாம் ஒன்னும் விழ வேணாம்.. உன் மனசுல இருக்குறதை சொல்லு.. அவன் உன்னை தலைல தூக்கி வச்சு ஆடுவான்.. அதுக்கு அண்ணி உத்திரவாதம் தர்றேன்.. சரியா..? இப்போ தூங்கு..!!"
சித்ரா திவ்யாவை படுக்க வைத்தாள். போர்வை போர்த்தி விட்டாள். அவளுடைய கூந்தலை இதமாக தடவிக் கொடுத்தாள். கொஞ்ச நேரத்திற்கு திவ்யாவின் முகத்தையே கண்கள் கொட்டாமால் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்புறம் எழுந்து கொண்டாள். அறையை விட்டு வெளியேறும் எண்ணத்துடன் அவள் நகர முயல, திவ்யா இப்போது அவளுடைய கையை எட்டி பற்றினாள்.
சித்ரா நின்றாள். எதுவும் புரியாமல் திரும்பி பார்த்தாள். 'என்ன..?' என்பது போல திவ்யாவை ஏறிட்டாள். திவ்யா எதுவும் பேசவில்லை. தனது வலது கையில் இருந்த அந்த தழும்பை தடவிக் காட்டினாள். சித்ரா இன்னும் குழப்பமாய் திவ்யாவையே பார்க்க.. திவ்யா இப்போது முகத்தில் ஒரு அழகான ஸ்நேக புன்னகையுடன் சொன்னாள்.
"சின்ன வயசுல என் கைல பட்ட சூடு..!! அந்தக்காயம் இப்போ ஆறிடுச்சு அண்ணி.. எனக்கு இப்போ வலிக்கலை..!!"
இப்போது சித்ராவும் கண்களில் நீர் துளிர்க்க திவ்யாவைப் பார்த்து புன்னகைத்தாள். திவ்யாவின் தலை முடியை லேசாக கலைத்துவிட்டவள், இதமான குரலில் சொன்னாள்.
"லூசு.. நிம்மதியா படுத்து தூங்குடி..!!"
சித்ரா திரும்பி நடந்தாள். கண்களில் வழிந்த நீரை ஒரு கையால் துடைத்துக் கொண்டாள். மறுகையால் விளக்கை அணைத்துவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறினாள்.
அத்தியாயம் 34
அடுத்த நாள் காலை..
அசோக் அக்காவின் வீட்டிற்குள் நுழைந்தபோது, கார்த்திக் ஹாலில் அமர்ந்து செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்தான். உள்ளே நுழைந்ததும் நிமிர்ந்து பார்த்து புன்னகைத்த கார்த்திக்குக்கு, பதிலுக்கு ஒரு புன்னகையை தந்தான். ஹாலை கடந்து உள்ளே சென்று கிச்சனுக்குள் நுழைந்தான். ஸ்டவ்வில் பால் கொதிப்பதை பார்த்துக் கொண்டிருந்த அக்காவிடம் சற்றே எரிச்சலாக கேட்டான்.
"என் டைரியை எடுத்துட்டு வந்தியா..?"
"டைரியா.. எந்த டைரி..?"
"ப்ச்.. தெரியாத மாதிரி நடிக்காத.. நீதான் எடுத்துட்டு வந்தேன்னு செல்வாண்ணா சொல்லிட்டாரு..!!"
"ஓ.. அதுவா..? அதுக்காகவா இப்படி அரக்கப்பரக்க ஓடியாற..? சரி.. காபி போடுறேன்.. சாப்பிடுறியா..?"
"அதுலாம் ஒன்னும் வேணாம்.. டைரியை எடுத்துட்டு வா.."

"கொஞ்சூண்டு பால் மிச்சம் இருக்குடா.. வேஸ்டா போயிடும்.. போடுறேன்.. சாப்பிடு..!!"
"ப்ச்.. மொதல்ல என் டைரியை எடுத்துக்குடுக்கா..!!"
"ஐயையையே..!! காலாங்காத்தாலேயே கால்ல வெண்ணித்தண்ணியை ஊத்திக்கிட்ட மாதிரி.. டைரி டைரின்னுக்கிட்டு..!! இப்போ அந்த டைரியை வாங்கிட்டுப்போய் என்ன பண்ணப்போற..? 'ஐ லவ் யூ திவ்யா.. ஐ லவ் யூ திவ்யா..'ன்னு கிறுக்காம இருக்க முடியலையோ..??"
"அதுக்கில்ல.. அதுல ஒரு ஃபோன் நம்பர் நோட் பண்ணி வச்சேன்.. அது வேணும்..!!"
"ஓஹோ..?? இரு காபி போட்டுட்டு போய் எடுத்துட்டு வர்றேன்..!!"
"நீ மொதல்ல போய் எடுத்துட்டு வா.. நான் உடனே கால் பண்ணனும்..!!"
"ஏண்டா இப்படி பறக்குற..?? சரி.. எடுத்துட்டு வர்றேன்.. நீ எங்கயும் போயிடாத.. இங்கயே இரு.. ஸ்டவ்வை பாத்துக்கோ..!! பால் பொங்கிடுச்சுன்னா.. ஆஃப் பண்ணிடு..!!"
"சரி சரி.. பாத்துக்குறேன் பாத்துக்குறேன்..!!" என்றவன், சற்றே குரலை தாழ்த்திக்கொண்டு,
"ஆமாம்.. அவ இல்லையா..?" என்று அக்காவிடம் கேட்டான்.
"எவ..?"
"நான் எவளை கேட்பேன்..?"
"திவ்யாவா..? வெளில போயிருக்கா..!!"
சொல்லிவிட்டு சித்ரா கிச்சனை விட்டு வெளியேற, அசோக் ஸ்டவ்வை கவனிக்காமல், கப்போர்டுகளில் அடுக்கி வைத்திருந்த டப்பாக்களை பார்வையிட்டான். அதில் முந்திரிப்பருப்பு போட்டு வைத்திருந்த டப்பாவை எடுத்து, உள்ளங்கை நிறைய கொட்டிக் கொண்டான். கொறிக்க ஆரம்பித்தான். வேறென்னவெல்லாம் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன என்று ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தான்.
கிச்சனை விட்டு வெளியே வந்த சித்ரா நேராக சென்று, திவ்யாவின் அறைக்குள் நுழைந்தாள். திவ்யா அப்போதுதான் குளித்து முடித்து ஃப்ரஷாக இருந்தாள். கூந்தலை பின்னிக் கொண்டிருந்தாள். சித்ராவை பார்த்ததும், 'வாங்க அண்ணி..' என்று புன்னகைத்தாள். சித்ராவும் ஒரு ஸ்நேக புன்னகையை அவளிடம் வீசிவிட்டு, உள்ளே நடந்து சென்று.. திவ்யாவின் படுக்கையில்.. தலைமாட்டுக்கு அருகே கிடந்த அந்த டைரியை எடுத்தாள்..!! அதைப்பார்த்த திவ்யா, உடனே சற்றே ஏக்கமாய் கேட்டாள்.
"ஏன் அண்ணி.. அது என்கிட்டயே இருக்கட்டுமே..?"
"அவன் டைரியை வாங்கிட்டு போக வந்திருக்கான்.."
"அ..அசோக் வந்திருக்கானா..?" திவ்யா ஒருமாதிரி உற்சாகமும், பதற்றமும் ஒன்று சேர்ந்தமாதிரியான குரலில் கேட்டாள்.
"ம்ம்.. வந்திருக்கான்..!! உன்னைப்பத்தி கேட்டான்.. நீ வீட்டுல இல்லைன்னு சொல்லிருக்கேன்.. நீ இருக்கேன்னு தெரிஞ்சா.. உடனே ஓடிப்போயிடுவான்..!! அதான்.. பொய் சொன்னேன்..!!"
"ம்ம்.. என் மேல அவ்ளோ கோவமா அவனுக்கு..?"
"ஐயோ.. ஐயோ..!! கோவம்லாம் ஒன்னும் இல்ல திவ்யா.. நீ வந்து பேசிட மாட்டியான்னு.. அவன் ஒவ்வொரு செகண்டும் துடிச்சுக்கிட்டு இருக்கான்.. நீ என்னடான்னா..!! சரி.. நான் வேணா ஒன்னு பண்ணவா..? திவ்யா உன்கிட்ட ஏதோ பேசனுமாம்னு.. உன் ரூமுக்கு அவனை அனுப்பி வைக்கவா.. பேசுறியா அவன்கிட்ட..??"

"இல்ல அண்ணி.. வேணாம் வேணாம்.. நான் அப்புறமா பேசிக்கிறேன்..!!" திவ்யா பதற்றமாக சொல்ல, சித்ரா அவளை பரிதாபமாக பார்த்தாள்.
"சரி உன் இஷ்டம்..!! உன் மனசுல இருக்குறதை நீயே மொதல்ல அவன்கிட்ட சொல்லு.. அதுவரை நான் ஒன்னும் சொல்லலை..!! சரியா..??"
"ம்ம்.. சரி அண்ணி..!!"
சித்ரா அந்த அறையை விட்டு வெளியேறினாள். டைரியுடன் கிச்சனுக்குள் நுழைந்தாள். நுழைந்தவள் உடனே பதறிப்போனாள். ஸ்டவ்வில் வைத்திருந்த பால் கொதித்து, பொங்கி வழிந்து கொண்டிருந்தது. கவனித்துக்கொள்ளுமாறு சொல்லிவிட்டு சென்றிருந்த அசோக்கோ, கப்போர்டை நோண்டிக் கொண்டிருந்தான். எரிச்சலான சித்ரா, ஒரு கையால் ஸ்டவ்வை ஆஃப் செய்துகொண்டே, அடுத்த கையால் அசோக்கின் தலையில் ஓங்கி குட்டினாள்.
"ஆஆஆ..!! ஏன்க்கா கொட்டுற.. வலிக்குது..!!"
"ஸ்டவ்வை பாத்துக்க சொல்லிட்டு போனா.. அங்க என்ன பாத்துட்டு இருக்குற..?"
"முந்திரிப்பருப்பு கெடைச்சது.. பாதாம் பருப்பு இருக்குமான்னு பாத்துட்டு இருந்தேன்..!!"
"உனக்கு இருக்குற கொழுப்புக்கு பாதாம் பருப்பு ஒண்ணுதான் பாக்கி..!! இந்தா.. உன் டைரி..!!"
"தேங்க்ஸ்க்கா..!!" டைரியை வாங்கிக்கொண்டு அசோக் கிச்சனை விட்டு வெளியேற,
"ஏய்.. போயிடாதடா..!! காபி போட்டுட்டேன்.. குடிச்சுட்டு போ..!!" சித்ரா கத்தினாள்.
"போடு போடு..!!"
சலிப்பாக சொன்ன அசோக், ஹாலுக்கு வந்தான். கார்த்திக்குக்கு எதிரே கிடந்த சோபாவில் அமர்ந்து கொண்டான். டைரியின் கடைசி பக்கத்தை புரட்டினான். அதில் குறித்திருந்த நம்பருக்கு செல்போனை எடுத்து கால் செய்தான். கால் பிக்கப் செய்யப்படவில்லை. மீண்டும் ஒருமுறை முயன்று தோற்றான். அப்புறம் சலிப்படைந்தவனாய் முயற்சியை கைவிட்டு செல்போனை பாக்கெட்டில் போட்டுக் கொண்டான். வரப் போகும் காபிக்காக காத்திருந்தான்.
அப்படி காத்திருக்கும் போதுதான் அதை கவனித்தான். திறந்து வைக்கப்பட்டிருந்த டைரியின் காகிதங்கள் காற்றில் படபடக்க, இப்போது வேறொரு பக்கம் விரிந்திருந்தது. அந்தப்பக்கத்தில் ஆங்காங்கே அவனுடைய கிறுக்கலை தவிர இப்போது வேறு சில கிறுக்கல்கள்..!! திவ்யாவின் கையெழுத்தில்.. 'ஐ லவ் யூ டா அசோக்.. ஐ லவ் யூ டா அசோக்..' என்று..!!
அசோக்கிற்கு ஒருகணம் எதுவும் புரியவில்லை. 'எப்படி இது சாத்தியம்..? திவ்யாவா இப்படி எல்லாம் கிறுக்கி வைத்திருக்கிறாள்..? அப்படியானால்.. அவள் தன் மனதை மாற்றிக் கொண்டாளா..? நிஜமாகவா..? திவ்யாவிடம் அக்கா பேசுவாள் என்று தெரியும்.. ஆனால்.. திவ்யா அவளை எல்லாம் மதிக்கவே மாட்டாள் என்றுதானே எண்ணியிருந்தேன்..? ஒருவேளை அக்கா பேசிபேசி திவ்யாவின் மனதை மாற்றி விட்டாளோ..? என் அக்காவுக்குள் இவ்வளவு திறமையா..? அதுசரி.. திவ்யா மனம் மாறியிருந்தால், அதை ஏன் இன்னும் என்னிடம் சொல்லவில்லை..?'
அசோக்கிற்கு குழப்பமாய் இருந்தது. ஆனால்.. அதேநேரம் அவனுடைய உடம்பெல்லாம் பரவசமாய் ஒரு உணர்ச்சி பரவுவதையும் அவனால் உணர முடிந்தது. 'இது மட்டும் உண்மையாக இருந்தால் எப்படி இருக்கும்..? திவ்யா என் காதலை புரிந்துகொண்டு என்னை ஏற்றுக் கொண்டால் எப்படி இருக்கும்..? அப்படி மட்டும் நடந்துவிட்டால்.. அதைவிட எனக்கு வேறு என்ன சந்தோஷம் இருக்கும்..?'
"இந்தாடா காபி.."
சித்ரா அசோக்கின் கவனத்தை காபி நீட்டி கலைத்தாள். அசோக் காபியை வாங்கி அமைதியாக உறிஞ்ச ஆரம்பித்தான். சித்ராவும் இன்னொரு சோபாவில் அமர்ந்து கொண்டு காபியை அருந்தினாள். இவர்கள் ஹாலில் அமர்ந்து பேசுவதை எல்லாம், திவ்யா அவளுடைய அறைக்குள் இருந்தவாறு காதுகளை கூர்மையாக்கி கவனித்துக் கொண்டிருந்தாள். காபியை உறிஞ்சியவாறே அசோக் கார்த்திக்கிடம் கேட்டான்.
"நீங்க காபி சாப்பிடலையா அத்தான்..?"
"ஹாஹா.. நான் அப்போவே சாப்பிட்டேன் அசோக்..!!" கார்த்திக் இளிக்க, சித்ரா இப்போது இடைமறித்து இடக்காக சொன்னாள்.
"உன் அத்தான் காலைல பெட்ல இருந்து எந்திரிச்சதும்.. பல்லு கூட வெளக்காம.. அந்த காபியை அப்படியே ரசிச்சு ரசிச்சு உறிஞ்சுவாறு பாரு..!! அடா அடா.. அதை பாக்குறதுக்கு ஆயிரம் கண் பத்தாது..!!"

சித்ராவின் நக்கலில் கார்த்திக் பட்டென முகம் சுருங்கிப் போனான். வெட்கப்பட்டுக்கொண்டு தன் முகத்தை ந்யூஸ் பேப்பருக்குள் புதைத்துக் கொண்டான். சித்ரா திரும்பி அசோக்கிடம் கேட்டாள்.
"அது சரி.. நீ ஏதோ கால் பண்ணனும்னு சொன்னியே.. பண்ணிட்டியா..?"
"பண்ணுனேன்.. யாரும் எடுக்க மாட்டேன்றாங்க..!!"
"ம்க்குக்கும்.. இதுக்காகத்தான் காலங்கத்தால வந்து டைரி டைரின்னு டான்ஸ் ஆடுனியாக்கும்..?"
"இல்லக்கா.. இன்னைக்கு எனக்கு நெறைய வேலை இருக்கு..!!"
"என்ன வேலை..?"
"ஜெர்மன் எம்பஸிக்கு போகணும்..!!"
"எதுக்கு..?"
"என்னோட விசா ப்ராசிங்ல ஏதோ சிக்கலு.. அதான்..!!" அசோக் சொல்ல இப்போது கார்த்திக் அவனிடம் கவலையாக கேட்டான்.
"விசாவா..? என்ன அசோக்.. ஆன்சைட் போறதுன்னு முடிவே பண்ணிட்டியா..??"
"ம்ம்.. ஆமாம்த்தான்.. முடிவு பண்ணிட்டேன்..!!" அசோக் இங்கே சொல்ல, உள்ளே கேட்டுக்கொண்டிருந்த திவ்யாவுக்கோ சுருக்கென்று இருந்தது.
"மூணு வருஷம்ல..?"
"ஆமாம்த்தான்.. கொஞ்சம் எக்ஸ்டன்ட் ஆனா கூட ஆகலாம்.."
"எப்படி அசோக்.. மூணு வருஷம்.. எங்களைலாம் விட்டுட்டு இருந்துடுவியா..?"
"கஷ்டந்தான்.. ஆனா இருந்துடுவேன்.. வருஷத்துக்கு ஒரு தடவை வந்துட்டு போவேன்த்தான்.. ஒன்னும் பிரச்னை இல்ல..!!" அசோக் கார்த்திக்கிடம் சொல்லிக்கொண்டிருக்க, சித்ரா இப்போது இடையில் புகுந்தாள்.
"இவன்கிட்ட இப்படி கேட்க கூடாதுங்க.. வேற மாதிரி கேக்கணும்.."
"வேற மாதிரின்னா எப்படி..?" அசோக் அக்காவை முறைத்தான்.
"மூணு வருஷம் திவ்யாவை விட்டு இருந்துடுவியா..?"
"ஏன்..? இருந்தா என்ன..?"
"ப்ச்.. கேட்டதுக்கு பதில் சொல்லு..!!"

"என்ன சொல்ல சொல்ற..? அவ கொரங்கு மூஞ்சியை பாக்க சகிக்காமத்தான் நான் ஆன்சைட்டே போறேன்.. போதுமா..??"
"அடப்பாவி..!!"
சித்ரா இங்கே வாய்பிளக்க, உள்ளே எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த திவ்யாவுக்கு சுருசுருவென இருந்தது. 'ம்ஹூம்.. இதை இப்படியே விடக் கூடாது..!! என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான்..?' திவ்யா ஓரிரு விநாடிகள்தான் யோசித்திருப்பாள். உடனே துணிச்சலாக ஒரு முடிவுக்கு வந்தாள். பின்னிய கூந்தலை தூக்கி பின்னால் போட்டுவிட்டு விருட்டென்று எழுந்தாள். தன் அறையில் இருந்து வெளிப்பட்டு ஹாலை நோக்கி ஒரு வீர நடை நடந்து வந்தாள்.
தூரத்தில் திவ்யா முகத்தை உர்ரென வைத்துக்கொண்டு வருவதை கவனித்த அசோக் பதறிப் போனான். 'இவ்வளவு நேரம் உள்ளேதான் இருந்தாளா இவள்..? ஐயையோ..!!' பதறியவன், கிசுகிசுப்பான குரலில் அக்காவிடம் கேட்டான்.
"என்னக்கா.. வெளில போயிருக்கான்னு சொன்ன..?"
"ம்ம்.. சும்மா.. பொய் சொன்னேன்..!!"
சித்ரா கூலாக சொல்லிவிட்டு காபியை உறிஞ்சினாள். அதற்குள் திவ்யா ஹாலுக்குள் நுழைந்திருந்தாள். வந்தவள் நேராக சென்று சித்ராவுக்கு அருகே மிக நெருக்கமாக அமர்ந்து கொண்டாள். அசோக்கை ஒருமுறை ஏறிட்டு பார்த்து, அப்புறம் 'ம்ஹ்ம்..' என்று முகத்தை சிலுப்பிக் கொண்டாள்.
"குடிச்சது போதும் அண்ணி.. குடுங்க..!!" என்று சித்ராவின் கையில் இருந்த காபியை பறித்தாள்.
"ஏய்.. ஏய்.. எச்சிடி இது.." என்று சித்ரா பதறினாள்.
"பரவால.. குடுங்க..!!"
கேஷுவலாக சொன்ன திவ்யா, சித்ரா சாப்பிட்ட மிச்ச காபியை வாங்கி உறிஞ்ச.. அசோக்கும், கார்த்திக்கும் அதிர்ந்து போய்.. வாயை பிளந்தார்கள்..!! 'காண்பதெல்லாம் கனவா நனவா..?' என குழம்பிப் போனவர்கள், கண்ணிமைக்க கூட மறந்து போய் விழிகள் விரிய அமர்ந்திருந்தார்கள்.
அப்புறம் கொஞ்ச நேரத்திற்கு கார்த்திக் எதுவும் பேசவில்லை. அமைதியாகவே இருந்தான். மற்ற மூவரும் பேசிக்கொண்டார்கள். ஆனால்.. அசோக்கும், திவ்யாவும் ஒருவருக்கொருவர் நேரிடையாக பேசிக்கொள்ளவில்லை. இருவரும் சித்ராவிடம்தான் பேசினார்கள். திவ்யாதான் முதலில் ஆரம்பித்தாள்.
"என்ன ஆச்சு அண்ணி உங்க தம்பிக்கு..? கோணவாயன் கொட்டாவி விட்ட மாதிரி உக்காந்திருக்கான்..??"
"தெரியலையே திவ்யா.. எதையோ பாத்து பயந்தவன் மாதிரி இருக்கான்.."
"பயமா.. எனக்கா..? அதுலாம் ஒன்னும் கெடயாது.." அசோக் இடையில் புகுந்து சொன்னான்.
"வேற என்னதான் பிரச்னையாம் அவனுக்கு..?"
"எனக்கு என்ன பிரச்னை..?"
"அப்புறம் எதுக்கு ஊரை விட்டு ஓடுறான்னு கேளுங்க அண்ணி.."
"ஹாஹா.. ஆன்சைட் போறதுக்கு பேரு.. ஊரை விட்டு ஓடுறதா.. கேளுக்கா..!!"
"அவன் எங்க வேணா போகட்டும்.. எதுக்கு என் மூஞ்சியை பாக்க சகிக்காம போறதா சொல்லணும்..? அதுவும் கொரங்கு மூஞ்சியாம்.. என் மூஞ்சியை பாத்தா கொரங்கு மாதிரியா இருக்கு..? மொதல்ல அவன் மூஞ்சியை ஒழுங்கா கண்ணாடில பாக்க சொல்லுங்க அண்ணி..!!"

"ஆமாம் அசோக்.. என்னதான் இருந்தாலும் நீ திவ்யாவை கொரங்குன்னு சொல்லிருக்க கூடாது.. அக்கா இதை வன்மையா கண்டிக்கிறேன்..!!" சித்ரா ஏதோ நாட்டாமை மாதிரி சொன்னாள். உடனே அசோக்,
"அக்கா.. இது நல்லா இல்ல..!! எனக்கு அந்த வார்த்தையை கத்துக்கொடுத்ததே நீதான்..!! நானாவது இன்னைக்கு ஒருநாள்தான் அவளை அப்படி சொன்னேன்.. நீ இதுவரை ஒரு ஆயிரம் தடவையாவது அவளை கொரங்கு கொரங்குன்னு சொல்லிருப்ப.. ஞாபகம் வச்சுக்கோ..!!" என்று அக்காவை மாட்டிவிட்டான்.
"சரி சரி.. விடு.. இப்போ எதுக்கு அதெல்லாம்..? ஸாரி திவ்யா..!!" சித்ரா அசட்டு சிரிப்புடன் சமாளிக்க முயன்றாள். திவ்யாவோ அவளுக்கு சப்போர்ட்டுக்கு வந்தாள்.
"ப்ச்.. அண்ணி.. நீங்க எதுக்கு அண்ணி ஸாரி கேக்குறீங்க..? நீங்க என் அண்ணி.. நீங்க என்னவேணா என்னை சொல்லலாம்.. உங்களுக்கு அந்த உரிமை இருக்கு..!! இவன் எப்படி சொல்லலாம்..? இவன் என்ன என்னை கட்டிக்கப் போறவனா..? ரொம்ப உரிமையா பட்டப்பேர் வச்சு என்னை கூப்பிடுறான்..?? கேளுங்க அண்ணி..!!"
"ம்ம்.. பாயின்ட்..!! பதில் சொல்லு தம்பி..!!" சித்ரா முகமெல்லாம் மீண்டும் பிரகாசமாக கேட்டாள்.
"நான் ஒருகாலத்துல அவளுக்கு ஃப்ரண்டா இருந்தவன்னு சொல்லுக்கா..!!" அசோக் சலிப்பாய் சொன்னான். உடனே திவ்யா,
"ப்ச்.. இந்த ஒருகாலத்துல ஃப்ரண்டா இருந்த கதைலாம் இப்போ வேணாம்..!! இவனைலாம் என் ஃப்ரண்டா என்னால ஏத்துக்க முடியாது.. வேணும்னா என் பாய்ஃப்ரண்டா இருந்துட்டு போகட்டும்..!!! ஓகேவான்னு கேட்டு சொல்லுங்க அண்ணி..!! ஆனா அதுக்கும் ஒரு கண்டிஷன்.. இந்த ஆன்சைட் ட்ரிப்லாம் கேன்சல் பண்ணிடனும்.. என்னை விட்டு எங்கயும் போகக் கூடாது.. என் கூடவே இருக்கணும்..!!"
திவ்யா சொல்ல சொல்ல.. அசோக்கின் மனதுக்குள் குபுகுபுவென ஒரு சந்தோசம் பொங்கியது. அந்த மாதிரி ஒரு உச்சபட்ச சந்தோஷத்தை அவன் அனுபவித்ததே இல்லை. திவ்யாவை காதலாக திரும்பி பார்த்தான். அதற்குள் சித்ரா,
"என்னடா தம்பி.. டீல் உனக்கு ஓகேவா..?" என்றாள். அசோக் தன் சந்தோஷத்தை வெளிப்படுத்திக் கொள்ளாமல், முகத்தை இறுக்கமாக மாற்றிக்கொண்டு,
"ஓஹோ.. அந்த அளவுக்கு ஆகிப் போச்சா..?? ஆமாம்.. அப்படி என்ன திடீர்னு என் மேல லவ்வு..?? கேளுக்கா..!!" என்றான்.
"திடீர்னுலாம் இல்ல.. ஆரம்பத்துல இருந்தே இந்த லூசுப்பயலைத்தான் நான் லவ் பண்றேன்னு சொல்லுங்க அண்ணி..!!"
"அப்படின்னா அந்த திவாகர்..?"
"அவன் கெடக்குறான் டுபாகூர்..!! அவனை நேத்தோட தலை முழுகியாச்சுனு சொல்லுங்க அண்ணி..!!"
"ஓஹோ..?? ஆரம்பத்துல இருந்தே என் மேல அவ்வளவு லவ்வுன்னா.. அப்புறம் ஏன் இத்தனை நாளா எங்கிட்ட சொல்லலையாம்..? கேளுக்கா..!!"
"அதை கேக்குறதுக்கு இவனுக்கு எந்த தகுதியும் இல்லைன்னு சொல்லுங்க அண்ணி..!! 'யாரைடா லவ் பண்றே'ன்னு கேட்டா.. 'அவ ஒரு லூசு'ன்னு சொல்றான் அண்ணி..!! இவன் மட்டும் சின்ன வயசுல இருந்தே இவன் லவ்வை அமுக்குனி மாதிரி அமுக்கி வச்சுப்பானாம்.. நாங்க மட்டும் உடனே வந்து சொல்லனுமா..? என்ன அநியாமா இருக்கு..?? எனக்கு என்ன இவனை மாதிரி சூது வாது தெரியுமா..?? நான் கொழந்தைப்பொண்ணு.. எது லவ் எது அட்ராக்ஷன்னு புரிஞ்சுக்க கொஞ்சம் லேட் ஆகிப் போச்சு..!! அதுக்கு என்ன இப்போ..??" திவ்யா சொல்லிவிட்டு அப்பாவி மாதிரி முகத்தை வைத்துக்கொள்ள, அவளுடைய கன்னத்தை பிடித்தவாறு சித்ரா சொன்னாள்.
"ஆமாண்டா அசோக்.. பாவம்டா இவ.. கொழந்தைப்பொண்ணு.. ஏத்துக்கோடா இவளை..!!"
"இல்லைக்கா.. இன்னும் எனக்கு நெறைய கொழப்பமா இருக்கு.. அதுலாம் கிளியர் ஆகணும்..!!"
"இன்னும் என்னடா கொழப்பம் உனக்கு..??" சித்ரா கேட்க, அதற்குள் திவ்யா பொறுமை இழந்தவளாய்..
"ப்ச்.. என்ன அண்ணி.. இன்னும் இவன்கிட்ட கெஞ்சிக்கிட்டு..?? எதுக்கு வளவளன்னு இழுக்குறான் இப்போ..?? நான் இவனை லவ் பண்றேன்.. வாழ்ந்தா இவன்கூடாதான்னு முடிவு பண்ணிட்டேன்.. இவனை விட்டு என்னால ஒருநாள் கூட பிரிஞ்சி இருக்க முடியாது..!! ஆன்சைட் ட்ரிப்பை கேன்சல் பண்றானா இல்லையான்னு கேட்டு சொல்லுங்க அண்ணி.." என்றாள்.
"அவ்வளவு ஈஸியாலாம் அதை கேன்சல் பண்ண முடியாது.. சொல்லுக்கா..!!" என்றான் அசோக்.

"ஏனாம்..?"
"நான் வாக்கு கொடுத்துட்டேன்.."
"வாக்கு கொடுத்துட்டானா..? நாக்கை கட் பண்ணிடுவேன்னு சொல்லுங்க அண்ணி..!! இவன் எப்படி ஜெர்மனி போறான்னு நான் பாக்குறேன்.. ஃப்ளைட்டுக்கு பாம் வச்சுடுவேன்..!!"
"ஐயயையோ.. ஏன் இப்போ சண்டை போட்டுக்குறீங்க..?" என்று சித்ரா புலம்பியதை இருவருமே கண்டுகொள்ளவில்லை. நேரடியாகவே இருவரும் சண்டை போட்டுக்கொள்ள ஆரம்பித்தார்கள்.
"ஏய்.. என்னடி நீ.. ரொம்ப பேசுற..?"
"நீ மட்டும் என்ன கொஞ்சமாவா பேசுற..? ஒளறுவாயன் ஓல்ட்மங்க் குடிச்ச மாதிரி ஓவராத்தான் பேசிட்டு இருக்குற..!!"
"யாருடி.. நான் ஓவரா பேசுறனா.. நான் ஓவரா பேசுறனா..?" அசோக் எகிற,
"அப்புறம் யாரு.. நானா..? போகாதன்னு சொன்னா.. பொத்திக்கிட்டு இருக்க மாட்டியா..?" திவ்யாவும் சீறினாள்.
"போடீ..!! நான் ஆன்சைட் போகத்தான் போறேன்.. உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ.."
"வேணாம் அசோக்.."
"என்னடி பண்ணுவ..?"
"என்ன பண்ணுவனா.. என்ன பண்ணுவனா.."
கடுப்பான திவ்யா டீப்பாய் மேலிருந்த டைரியை எடுத்து அசோக்கின் தலையிலேயே 'மடார்.. மடார்..' என்று போட ஆரம்பித்தாள். அசோக் திணறிப்போனான். 'ஏய்.. அடிக்காதடி அடிக்காதடி..' என்று அவளை சமாளிக்க முயன்றான். 'அப்போ போகமாட்டேன்னு சொல்லு.. போகமாட்டேன்னு சொல்லு..' என்று அடிப்பதை தொடர்ந்து கொண்டிருந்தாள். 'சரிடி.. போகலை.. போகலை.. போதுமா..?' என்றவாறு அசோக் திவ்யாவின் கையிலிருந்த டைரியை படக்கென்று பறித்தான்.
அவ்வளவுதான்..!! குனிந்திருந்த திவ்யா தடுமாறிப் போனாள். அப்படியே அசோக்கின் மீது பொத்தென்று விழுந்தாள். விழுந்தவள் அசையக் கூட மனமின்றி, அசோக்கின் முகத்தையே ஆசையாக பார்த்தபடி அப்படியே கிடந்தாள். அசோக்கும் அதை எதிர்பார்த்திருக்கவில்லை. அவனுக்கும் விலகிக்கொள்ள தோன்றவில்லை. திவ்யாவை அணைத்துக்கொண்டு சலனமில்லாமல் கிடந்தான். பார்த்துக்கொண்டிருந்த சித்ராவும், கார்த்திக்கும்தான் பதறிப் போனார்கள்.
"ஏய்.. எந்திரிங்கப்பா.. நாங்கல்லாம் இருக்குறோம்.."
என்றவாறு பாய்ந்து சென்று அவர்களை பிரித்துவிட படாதபாடு பட்டார்கள்.
அத்தியாயம் 35
அதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து..
அசோக் அந்த மொட்டை மாடியில் கைகளை மார்புக்கு குறுக்காக கட்டியவாறு நின்று கொண்டிருந்தான். திவ்யாவுக்காக காத்திருந்தான். ஈரப்பதமான தென்றல் காற்று ஜிலுஜிலுவென வீசி, அசோக்கின் கேசத்தை கலைத்துவிட முயற்சி செய்தது. அது மதியம் இரண்டு மணிதான். ஆனால் மாலை ஆறு மணியோ என்று சந்தேகிக்கும் அளவுக்கு சூரிய வெளிச்சம் இன்றி வானம் மந்தமாக காட்சியளித்தது. நீலவானம் எங்கும் இப்போது திரள்திரளாய் அடர்கருப்பு மேகங்கள். எந்த நேரமும் வானம் பொத்துக்கொண்டு மழையை ஊற்றிவிடும் என்று அசோக்கிற்கு தோன்றியது.

திவ்யா படிக்கட்டில் இருந்து மொட்டை மாடியில் பிரவேசித்தாள். ஒருமாதிரி அப்படியும் இப்படியும் திரும்பி திரும்பி, திருட்டுப் பார்வை பார்த்தபடியே வந்தாள். அசோக் தனது பின்புறத்தை காட்டியவாறு கைகட்டி நின்றிருந்தான். அசோக்கை நெருங்கிய திவ்யா, அவனது புட்டத்தில் ஒரு தட்டு தட்டினாள். உடனே அசோக் திரும்பினான். திவ்யாவை பார்த்து அழகாக புன்னகைத்தான். திவ்யா எந்த உணர்ச்சியும் காட்டாமல்,
"ம்ம்.. இந்தா.."
என்று தன் வலது கையை அவன் முன்பாக நீட்டினாள். அவளுடைய உள்ளங்கையில் நீளமாய் ஒரு சிகரெட்டும், ஒரு மேட்ச்பாக்சும் இருந்தன. அதைப் பார்த்த அசோக் இப்போது குழப்பமாய் திவ்யாவை ஏறிட்டான். ஏதோ பார்க்கக் கூடாததை பார்த்தவன் மாதிரி, முகத்தை சுளித்தவாறு கேட்டான்.
"என்னது இது..??" அவன் அவ்வாறு கேட்க, உடனே திவ்யா எரிச்சலானாள்.
"ப்ச்.. அப்டியே போட்டேன்னா.. இது என்னன்னு உனக்கு தெரியாதா..?"
"என்னன்னு தெரியுதுடி.. இதை எதுக்கு கைல வச்சு சுத்திக்கிட்டு இருக்கேன்னு கேட்டேன்..?"
"ம்ம்.. மொட்டை மாடிக்கு போய் ரெண்டு இழுப்பு இழுத்து பாக்கலாம்னு எடுத்துட்டு வந்தேன்..!! உதை வாங்குவ.. உனக்குத்தாண்டா எடுத்து வந்தேன்.. லூசு..!!"
"எனக்கா..?? நான் உன்கிட்ட தம்மு வேணும்னு கேட்டனாக்கும்..??"
"அப்புறம் எதுக்கு மொட்டை மாடிக்கு வர சொன்ன..?"
"ப்ச்.. மொட்டை மாடிக்கு வர சொன்னேன்.. தம்மு எடுத்துட்டு வர சொன்னனா..?"
இப்போது திவ்யா நிஜமாகவே குழம்பிப் போனாள். நெற்றியை சுருக்கி, தலையை ஒரு கையால் சொறிந்தவாறே கேட்டாள்.
"அ..அப்புறம்.. அப்போ எதுக்கு சிக்னல் கொடுத்த..?"
"எப்போ..?"
"ப்ச்.. அப்போடா..!! எல்லாரும் உக்காந்து சாப்பிட்டுட்டு இருக்குறப்போ.. யாருக்கும் தெரியாம.. எனக்கு மட்டும் நைஸா சிக்னல் குடுத்தியே.. உதட்டுல வெரலை வச்சு இப்படி இப்படி பண்ணுனியே..?"
"அடி லூசு.. அது சிகரெட்டுக்கு கொடுத்த சிக்னல் இல்ல..!!"
"அப்புறம்..??"
"இதுக்கு கொடுத்த சிக்னல்..!!"
அசோக் உதட்டை பிதுக்கி 'முத்தத்துக்காக கொடுத்த சிக்னல்' என்று திவ்யாவுக்கு உணர்த்தினான். உடனே திவ்யாவின் முகம் குப்பென வெட்கத்தில் சிவந்து போனது. அவளுடய உடலில் ஜிவ்வென்று ஒரு உணர்வு ஓடி அவளை சிலிர்க்க வைத்தது. அவளுடய உதடுகள் படபடத்தன. கைவிரல்கள் காற்றில் டைப் அடித்தன. அவளுடைய செழித்த மார்புகள் ரெண்டும் 'குபுக் குபுக்'கென ஏறி இறங்கின. அசோக்கின் முகத்தை ஏறிட வெட்கப்பட்டுக்கொண்டு, வேறெங்கோ பார்வையை திருப்பியவாறு மெல்லிய குரலில் சொன்னாள்.
"ச்சீய்.. போடா.. அதெல்லாம் ஒன்னும் கிடையாது..!!"
"ப்ளீஸ்டி திவ்யாக்குட்டி.. ஒன்னே ஒன்னு.. ப்ளீஸ்..!!"

"ப்ச்.. சொல்றேன்ல..? அதெல்லாம் ஒன்னும் வேணாம்..!! தம் எடுத்துட்டு வந்திருக்கேன்.. அடி..!! கீழ போகலாம்...!! இப்போல்லாம் நாம தனியா எங்க போனாலும்.. ரெண்டும் குசுகுசுன்னு ஏதோ பேசிக்கிட்டு கிண்டல் அடிக்குதுங்க..!!"
"எனக்கு தம்முலாம் வேணாம்.. கிஸ்தான் வேணும்..!!"
"இப்போதைக்கு தம் மட்டுந்தான்.. கிஸ்லாம் கிடையாது..!!"
"ம்ம்ம்.. உனக்கு ஒரு மேட்டர் தெரியுமா..?"
"என்ன..?"
"நான் தம்மை விட்டு ரெண்டு நாள் ஆகுது..!!" அசோக் சற்றே பெருமையாக சொல்ல,
"என்னடா சொல்ற..?" திவ்யா நம்பமுடியாமல் கேட்டாள்.
"ஆமாம் திவ்யா.. தம்மு, தண்ணி.. எல்லாம் விட்டாச்சு..!! நேத்து உக்காந்து உன்னை நெனச்சு ஒரு கவிதை கூட எழுதிட்டேன்..!! தெரியுமா..??"
"ஹஹாஹஹாஹஹா...!! கவிதையா..?? நீயா..??"
"ஏய்.. இங்க பாரு.. கவிதையை கேக்காமலே இப்படிலாம் நக்கலா சிரிக்கப்படாது..!! கவிதையை சொல்றேன்.. கேட்டுட்டு அப்புறம் சொல்லு.. நல்லாருக்கா இல்லையான்னு..!!"
"ஹஹாஹஹாஹஹா...!! சரி சரி சொல்லு.. சொல்லித்தொலை..!!"
உடனே அசோக் தான் நேற்று எழுதிய, தனது முதல் கவிதை சொல்ல தயாரானான். தொண்டையை செருமிகொண்டான். பத்தாயிரம் பேர் கூடியிருக்கும் மேடையில் கவிதை வாசிப்பவன் போல பாவனை செய்து கொண்டு.. நிறுத்தி நிதானமாக.. ஏற்ற இறக்கத்துடன் சொன்னான்..!!
"கண்கள் எனது.. கட்டில் எனது..
கனவுகளுக்கு மட்டும் நீயே கட்டளையிடுகிறாய்..!!
உள்ளம் எனது.. உடலும் எனது..
உணர்வுகளுக்கு மட்டும் நீயே உத்தரவிடுகிறாய்..!!"
சொல்லி முடித்தவன், காலரை தூக்கி விட்டவாறு பெருமையாக திவ்யாவிடம் கேட்டான்.
"எப்படி இருக்கு..??"
"ம்ம்ம்.. மின்னலே படப்பாட்டை உல்ட்டா பண்ணின மாதிரி இருக்கு.. இருந்தாலும் பரவால..!!"
"கொழுப்புடி உனக்கு..!! உன் மூஞ்சிக்கு உல்ட்டா பண்ணுன கவிதையே ரொம்ப ஜாஸ்தி..!! உனக்காக இதெல்லாம் பண்றேன் பாரு.. உனக்கு நக்கலாத்தான் இருக்கும்..!!"
"ஹாஹா.. சரிசரி.. பண்ணு பண்ணு.. நான் நக்கலடிக்கலை..!!"
திவ்யா சிரித்தவாறே சொல்ல, அசோக் இப்போது கிண்டலான குரலில் சொன்னான்.

"ம்ம்ம்.. கவிதை கூட ஈசியா வந்துடுச்சு திவ்யா..!! இந்த சைட் அடிக்கிறதை விடுறதுதான்.. ரொம்ப கஷ்டமா இருக்கு.. ஏதாவது கலரா க்ராஸ் ஆச்சுன்னா.. கண்ணு என் கண்ட்ரோல்ல இல்லாம.. பின்னாடியே போகுது.. ரொம்ப கஷ்டமா இருக்கு..!! என்ன பண்ணலாம் திவ்யா..?" என்று அப்பாவியாக கேட்டான்.
"ஓஹோ..?? கண்ணுமுழியை தோண்டி கைல குடுத்துடுறேன்.. அப்புறம் ஒன்னும் கஷ்டமா இருக்காது..!!"
"ஹஹாஹஹாஹஹா...!!"
"மவனே.. உன் சேட்டை எல்லாம் மூட்டை கட்டி வச்சிடு..!! எவளையாவது பார்த்தேன்னு தெரிஞ்சது.. மூக்கு பேந்துடும், பாத்துக்கோ..!!"
"ஹாஹா.. சரிசரி.. பாக்கலை..!!"
"ம்ம்ம்.. அப்போ இதை கஷ்டப்பட்டு சுட்டுட்டு வந்ததுலாம் வேஸ்ட்டா..?" திவ்யா மீண்டும் உள்ளங்கையை திறந்து காட்ட,
"இன்னுமா இதை கைல வச்சுட்டு இருக்குற..?"
சொன்ன அசோக் திவ்யாவின் கையிலிருந்த சிகரெட்டையும், மேட்ச் பாக்சையும் எடுத்து தூரமாய் தூக்கி எறிந்தான். அப்புறம் திரும்பி திவ்யாவைப் பார்த்து அழகாக, ஒரு குழந்தைத்தனமான புன்னகையை வீசினான். திவ்யா இப்போது கண்ணிமைக்காமல் அசோக்கையே காதலாக பார்த்தாள். பார்க்க பார்க்க.. 'என் மீது இவன் எவ்வளவு பிரியம் வைத்திருக்கிறான்..? எனக்காக இவன் என்னவெல்லாம் செய்கிறான்..?' என்று அவளுக்கு பெருமையாக இருந்தது. அவளுடைய உள்ளத்துக்குள் காதல் ஊற்று குபுகுபுவென பொங்க ஆரம்பித்தது.
திவ்யா இப்போது அசோக்கை நெருங்கி நேருக்கு நேராக நின்றுகொண்டாள். இரண்டு கைகளாலும் அவனது இடுப்பை வளைத்துக் கொண்டாள். அவளுடைய உடல் அசோக்கின் உடலை உரசிக்கொண்டிருக்க, அவளது பட்டு மார்புகளோ அசோக்கின் நெஞ்சில் தாராளமாகவே தவழ்ந்து கொண்டிருந்தன. இருவரது முகங்களுக்கும் வெகு நெருக்கமாக இருக்க, ஒருவர் அடுத்தவரின் வாசனையை முழுமையாக உணர்ந்து கொள்ள முடிந்தது. அசோக்கிற்கு அந்த நெருக்கம் பிடித்திருந்தது. அந்த நெருக்கம் தந்த சுகத்தில் திளைத்தவனாய் திவ்யாவை பார்த்தான். திவ்யா சற்றே கிறக்கமான குரலில் கேட்டாள்.
"எல்லாம் எனக்காகவாடா..??"
"ம்ம்.."
"என்னைய உனக்கு அவ்வளவு பிடிக்குமா..??"
"ம்ம்.. ரொம்ப ரொம்ப பிடிக்கும்..!! உன் அளவுக்கு உலகத்துல வேற யாரையும் பிடிக்காது..!!"
"ம்ம்.. ஐ லவ் யூ டா..!!"
"ஐ லவ் யூ டி..!!"
"இதெல்லாம் நீ பண்ணனும்னு அவசியம் இல்லடா அசோக்.. காதலுக்கும், கண்டிஷனுக்கும் எந்த கனெக்ஷனும் இல்லைன்னு இப்போ நான் நல்லா புரிஞ்சுக்கிட்டேன்..!! நான் எதுவும் சொல்ல மாட்டேன்.. நீ எப்படி இருக்கியோ அப்படியே இரு.. எனக்காக எதுவும் நீ மாத்திக்க வேணாம்..!!"
"ம்ஹூம்.. நான் மாத்திப்பேன்..!! என் லவ்வை புரிஞ்சுக்கிட்டு.. என்னை தேடி வந்த என் தேவதைக்காக.. அவளுக்கு புடிச்ச மாதிரி என்னை நான் மாத்திப்பேன்..!! அவ சந்தோஷத்துக்காக என்ன செய்யணுமோ.. எல்லாம் செய்வேன்..!!"
இப்போது திவ்யா தன் கைகள் இரண்டாலும் அசோக்கின் கன்னங்களை தாங்கிப் பிடித்தாள். அவனையே கண்கொட்டாமல் காதலாக பார்த்தாள்.
"என்ன திவ்யா அப்படி பாக்குற..?" அசோக் புரியாமல் கேட்டான்.
"இல்லடா.. நான் தேடுனது என் உள்ளங்கைக்குள்ளேயே இருந்திருக்கு..!! அது தெரியாம.. நான் உலகம் பூரா போய் தேடிப்பாத்துட்டு வந்துட்டேன்டா அசோக்..!!"

"ஹாஹா.. பைத்தியம்..!!"
"ம்ம்ம்.. பைத்தியந்தான்..!! சரி.. உன் சந்தோஷத்துக்காக நான் என்ன செய்யணும்னு சொல்லு.. செய்றேன்..!!"
"ஹாஹா.. நீயா..?? நீ என்ன செய்யப் போற..??"
"என்னவேணாலும்..!! சொல்லு.. என்ன வேணும்..??"
"ம்ம்ஹ்ஹ்ம்ம்.. நான் என்ன கேட்கப் போறேன்..?? இறுதிவரை உன் அன்பு.. இப்போதைக்கு ஒரே ஒரு முத்தம்..!!"
"போடா பொறுக்கி.. சுத்தி சுத்தி முத்தத்துலையே வந்து நிக்கிறான்..!!" திவ்யா இப்போது ஒரு போலிக்கோபத்துடன், அசோக்கிடம் இருந்து விலகிக் கொண்டாள்.
"ப்ளீஸ்டி.. ஒன்னே ஒன்னு..!!"
"ஐயையையே..!! இது என்ன.. உன்னை லவ் பண்ணினது ரொம்ப தப்பாப்போச்சே.. சும்மா சும்மா முத்தம் கேக்குற..?? அல்ரெடி ரெண்டு நாள்ல.. இருபத்திரண்டு முத்தம் ஆகிப்போச்சு.. நாம ரொம்ப ஸ்பீடா போறோம்னு எனக்கு தோணுது..!!"
"லூசு.. இதுக்குலாமா அக்கவுன்ட் வச்சுப்ப..?"
"ஏன்..?? உன்னை மாதிரி ஆளுகளுக்குலாம்.. இந்த மாதிரி அக்கவுன்ட் வச்சிக்கிறது நல்லதுதான்..!!"
"ஹாஹா.. சரி சரி..!! உன் அக்கவுண்ட்ல.. ப்ளஸ் ஒன் போட்டுக்கோ.. வா..!!"
"நோ.. நோ..!!"
"ப்ளீஸ்.. ப்ளீஸ்..!!"
அசோக் கெஞ்சிக் கொண்டிருக்கும்போதே, வானம் தூறல் போட ஆரம்பித்தது. அசோக்கும், திவ்யாவும் அண்ணாந்து வானத்தை பார்த்தார்கள். பொட்டு பொட்டாய் விழ ஆரம்பித்த துளிகள், சில வினாடிகளிலேயே சடசடவென பெருமழையாய் மாறிப் போயின..!!
"அய்யய்யோ.. மழை புடிச்சுக்கிச்சு..!!"
திவ்யா பதறிப்போய் படிக்கட்டை நோக்கி ஓடினாள். நாலைந்து எட்டுகள் வேகமாக எடுத்து வைத்தவள், அப்புறம் அப்படியே நின்று திரும்பி அசோக்கை பார்த்தாள். அசோக் அசையாமல் அதே இடத்தில் நின்றுகொண்டிருந்தான். அதற்குள்ளாகவே பாதி நனைந்து போயிருந்தான். திவ்யா கையசைத்து அவனை அழைத்தாள்.
"வாடா.. மழை ஊத்துது.."
"இல்ல.. நான் வரலை.."
"ஏன்.. என்னாச்சு..??"
"நான் வரலை திவ்யா.. நான் இங்கயே இருக்குறேன்.. நீ வேணா போ..!!"

திவ்யா இப்போது அசோக்கை ஒருமாதிரி வித்தியாசமாக பார்த்தாள். அப்புறம் அந்தப்பார்வை கொஞ்சம் கொஞ்சமாய் காதல் பார்வையாக மாறியது. ஓரிரு வினாடிகள்தான்யோசித்திருப்பாள். ஓடிச்சென்று அசோக்கை அணைத்துக் கொண்டாள். அசோக்கும் அதற்காகத்தான் காத்திருந்தவன் போல, அவளை வாரி தன்னுடன் இறுக்கிக் கொண்டான். திவ்யா இப்போது காதலும், கிறக்கமுமாய் சொன்னாள்.
"இல்ல.. நான் போகலை.. நான் உங்கூடத்தான் இருப்பேன்..!!"
சொல்லிவிட்டு அசோக்கை இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொண்டாள். மேலே இருந்து ஜில்லென்று மழை நீர் கொட்டி, இணைந்திருந்த இருவரது உடலையும் நனைத்து, குளிர்விக்க முயன்றது. ஆனால்.. அதற்கு போட்டியாக.. அவர்களது தேகம் இரண்டும் ஒன்றோடொன்று மிக நெருக்கமாக உரசி.. அனல் உண்டாக்க ஆக வேண்டிய காரியங்களை செய்தன..!!
இதமும், கதகதப்புமாய்.. இருவரும் உடல்கள் பிண்ணிக்கொள்ள நின்றிருக்க.. அவர்களது இதழ்களும் கூட.. அவர்களையும் அறியாமல்.. ஒன்றை ஒன்று நெருங்கின..!! இரு ஜோடி இதழ்களுக்கும் இடையே இப்போது இரண்டு, மூன்று மில்லிமீட்டர் இடைவெளிதான் இருக்கும்.. அத்தனை நெருக்கம்..!! அசோக் போதையும், கிறக்கமுமாய் கேட்டான்.
"தரவா..?"
"வேணாமா..?"
"தந்தப்புறம் அடிக்க மாட்டியே..?"
"தரலைன்னாத்தான் அடிப்பேன்.. அடி வேணுமா இப்போ..?"
"ஹாஹா.. என்னாச்சு உனக்கு திடீர்னு..?"
"ஏன்.. ஒன்னும் ஆகலையே..?"
"நான் அப்ப பொய் சொல்றேன்றியா..?"
"நீ இப்படி பேசிட்டேதான் இருக்க போறியா..?"
"வேற என்ன பண்ணனும்..?"
"ம்ம்.. பச்சைக்கொழந்தை.. சொல்லித் தரணுமாக்கும்..?"
"ஏன்.. சொல்லித்தந்தா என்ன.. கொறைஞ்சு போயிடுவியாக்கும்..?"
"ஹாஹா.. சொல்லித்தரணுமா.. என் கண்ணனுக்கு..?"
"ஹாஹா.. இன்னும் புரியலையா.. என் கண்மணிக்கு..?"
திவ்யா புரிந்து கொண்டாள். பாய்ந்து சென்று தன் உதடுகளால் அசோக்கின் உதடுகளை கவ்விக் கொண்டாள். சுவைக்க ஆரம்பித்தாள். அவர்களுடைய உதடுகள் ரெண்டும் எசகுபிசகாய் சிக்கிக்கொண்டு சண்டையிட.. அதைப்பார்த்து வெட்கம் கொண்ட அவர்களது விழிகள்.. இப்போது இமைகளை கொஞ்சம் கொஞ்சமாய் இழுத்து போர்த்திக் கொள்ள ஆரம்பித்தன..!! மொட்டை மாடியில்.. கொட்டும் மழையில்.. முத்தத்துக்காக இதழ்கள் நான்கையும்.. யுத்தம் செய்ய விட்டுவிட்டு.. சித்தம் மொத்தமும்.. பித்தம் ஏறிப்போய்.. நின்றிருந்தனர் அசோக்கும், திவ்யாவும்..!!








